இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் சீர்திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு


இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறையில் சீர்திருத்தம்: சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு விசாரணை தள்ளிவைப்பு
x
தினத்தந்தி 11 May 2018 8:45 PM GMT (Updated: 11 May 2018 8:42 PM GMT)

லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக விதிமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது.

புதுடெல்லி, 

லோதா கமிட்டி சிபாரிசின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக விதிமுறையில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த 1–ந் தேதி நடந்த விசாரணையின் போது, ‘இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை வகுப்பது குறித்த தங்களது ஆலோசனைகளை மாநில கிரிக்கெட் சங்கமும், இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளும் மே 11–ந் தேதிக்குள் கோர்ட்டுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் புதிய விதிமுறையின் இறுதி வடிவம் கோர்ட்டு உத்தரவுக்கு உட்பட்டதாகும்’ என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறை குறித்து, மாநில கிரிக்கெட் சங்கங்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் தங்களது ஆலோசனைகளை, இந்த வழக்கில் கோர்ட்டுக்கு உதவ நியமிக்கப்பட்டுள்ள சீனியர் வக்கீல் கோபால் சுப்பிரமணியத்திடம் அறிக்கையாக சமீபத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையில் லோதா கமிட்டி சிபாரிசில் தெரிவிக்கப்பட்ட ஒரு மாநிலத்துக்கு ஒரு ஓட்டு, 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் நிர்வாகிகளாக இருக்கக்கூடாது. ஒருவர் தொடர்ந்து 2 முறைக்கு மேல் ஒரு பதவியில் தொடர வேண்டும் என்றால் 3 ஆண்டு கால இடைவெளி விட்டு பிறகு தான் போட்டியிட முடியும். தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கான அதிகார பகிர்வு முறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்பது போன்றவற்றை பெரும்பாலான மாநில கிரிக்கெட் சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஜூலை 4–ந் தேதிக்கு தள்ளிவைப்பதாக நீதிபதிகள் அறிவித்தனர்.


Next Story