ராஜஸ்தான் அணியிடம் தோல்வி: பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா


ராஜஸ்தான் அணியிடம் தோல்வி: பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை - மும்பை கேப்டன் ரோகித் சர்மா
x
தினத்தந்தி 14 May 2018 10:45 PM GMT (Updated: 14 May 2018 9:23 PM GMT)

ராஜஸ்தானுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பேட்டிங்கில் சரியாக செயல்படவில்லை என்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.

மும்பை,

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக இவின் லீவிஸ் 60 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 38 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 36 ரன்னும் எடுத்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும், தவால் குல்கர்னி, ஜெய்தேவ் உனட்கட் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணி 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டார்சி ஷார்ட் 4 ரன்னும், கேப்டன் ரஹானே 37 ரன்னும், சஞ்சு சாம்சன் 26 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஜோஸ் பட்லர் 53 பந்துகளில் 9 பவுண்டரி, 5 சிக்சருடன் 94 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மும்பை அணி தரப்பில் ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார் கள். ராஜஸ்தான் அணி வீரர் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

தோல்வி குறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கருத்து தெரிவிக்கையில், ‘இதுபோன்ற ஆடுகளத்தில் நாங்கள் 15 முதல் 20 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்க வேண்டும். முன்பு நாங்கள் தோல்வி கண்ட ஆட்டங்களிலும் இதுபோலவே சரியாக பேட்டிங் செய்யவில்லை. இந்த ஆட்டத்திலும் நாங்கள் நிறைவான திறனை வெளிப்படுத்தவில்லை. ஜோஸ் பட்லர் சிறந்த பார்மில் இருக்கிறார். அவர் எங்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கவில்லை. எங்களுடைய பந்து வீச்சு நன்றாகவே இருந்தது. எங்களது ஆட்டத்தில் சில துறைகளில் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். எஞ்சிய 2 ஆட்டங்களிலும் நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும்’ என்றார்.

Next Story