பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்? கேப்டன் அஸ்வின் விளக்கம்


பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன்? கேப்டன் அஸ்வின் விளக்கம்
x
தினத்தந்தி 21 May 2018 11:15 PM GMT (Updated: 21 May 2018 10:47 PM GMT)

ஐ.பி.எல். போட்டியில் பஞ்சாப் அணி லீக் சுற்றை தாண்ட முடியாமல் போனது ஏன் என்பதற்கு கேப்டன் அஸ்வின் விளக்கம் அளித்துள்ளார்.

புனே,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனேயில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை தோற்கடித்தது. இதில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்ல் (0), லோகேஷ் ராகுல் (7 ரன்) சோபிக்காத நிலையில் கருண் நாயர் அரைசதம் அடித்து (54 ரன், 3 பவுண்டரி, 5 சிக்சர்) சரிவில் இருந்து காப்பாற்றினார். பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

அடுத்து களம் இறங்கிய சென்னை அணி 19.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்து 9-வது வெற்றியை ருசித்தது. துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா 61 ரன்களுடனும், கேப்டன் டோனி 16 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியை 100 ரன்களுக்குள் மடக்கினால் மட்டுமே பிளே-ஆப் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் பஞ்சாப் அணி தோல்வியுடன் (மொத்தம் 6 வெற்றி, 8 தோல்வியுடன் 12 புள்ளி) பரிதாபமாக வெளியேறியது.

தோல்வி குறித்து பஞ்சாப் கேப்டன் அஸ்வின் கூறியதாவது:-

இந்த ஆட்டத்தில் எங்களது பேட்டிங் சரியில்லை. ‘பவர்-பிளே’யிலேயே 3 விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. கருண் நாயர் நன்றாக ஆடினாலும் 20 முதல் 30 ரன்கள் குறைவாகவே எடுத்து விட்டோம். ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஓரளவு சிறப்பாக விளையாடினோம். ஆனால் மே மாதம் (கடைசி 7 ஆட்டங்களில் 6-ல் தோல்வி) மோசமாக அமைந்து விட்டது.

இந்த தொடரை எடுத்துக் கொண்டால் தொடக்க கட்ட லீக் ஆட்டங்களில் அபாரமாக ஆடினோம். ஆனால் பிற்பகுதியில் ஒருங்கிணைந்த ஆட்டம் இல்லாமல் போய் விட்டது. தொடக்க வீரர்கள் லோகேஷ் ராகுல், கிறிஸ் கெய்ல் மட்டுமே அணியில் கணிசமான ரன்களை குவித்து இருக்கிறார்கள். மிடில் வரிசை பேட்டிங் எதிர்பார்த்தபடி ‘கிளிக்’ ஆகவில்லை. அது தான் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.

இதே போல் பெங்களூருக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஏற்பட்ட மோசமான தோல்வி (88 ரன்னில் சுருண்டது) எங்களது முன்னேற்றத்தை கெடுத்து விட்டது என்று சொல்லலாம். அந்த தோல்வியால் ரன்ரேட் குறைந்ததோடு, வீரர்களின் மனஉறுதியும் வெகுவாக சீர்குலைந்து போனது.

இவ்வாறு அஸ்வின் கூறினார்.

இந்த ஆட்டத்தில் சென்னை கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி 3 கேட்ச் செய்தார். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிகம் பேரை அவுட் ஆக்கிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை டோனி படைத்தார். டோனி இதுவரை 216 பேரை விக்கெட் கீப்பிங் மூலம் வெளியேற்றி இருக்கிறார். இதற்கு முன்பு பாகிஸ்தானின் கம்ரன் அக்மல் 215 பேரை ஆட்டம் இழக்கச் செய்ததே இந்த வகையில் சாதனையாகும்.

சொந்த ஊர் மைதானத்தில் (புனே) வெற்றியுடன் லீக் சுற்றை நிறைவு செய்ததால் திருப்தி அடைந்த டோனி ஆட்டம் குறித்து கூறும் போது, ‘இந்த ஆடுகளத்தில் பந்து கொஞ்சம் ஸ்விங் ஆனது. ஸ்விங் ஆகும் போது அதன் மூலம் நிறைய விக்கெட்டுகளை சாய்க்க முயற்சிப்பார்கள். ஆனால் ஹர்பஜன்சிங் (19 ரன்), தீபக் சாஹர் (39 ரன்) ஆகியோரை முன்கூட்டியே இறக்கியது அவர்களிடம் குழப்பத்தை விளைவித்தது. பவுலிங்குக்கு சாதகமாக ஆடுகளம் இருக்கும் போது பிரதான பேட்ஸ்மேன்கள் என்றால் சரியான உயரத்தில், துல்லியமாக பந்து வீசுவார்கள். அதே நேரத்தில் பின்வரிசை வீரர்களை இறக்கும் போது பந்து வீச்சில் மாற்றத்தை செய்வது உண்டு. இதன்படியே பஞ்சாப் பவுலர்கள் தங்களது திட்டத்தை மாற்றி யார்க்கரும், பவுன்சரும் வீசினர். எங்களது பேட்டிங் வரிசை மாற்றத்துக்கு நல்ல பலன் கிடைத்தது.’ என்றார்.

Next Story