‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம்’ உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் பேட்டி


‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம்’ உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் பேட்டி
x
தினத்தந்தி 31 May 2018 10:45 PM GMT (Updated: 31 May 2018 8:40 PM GMT)

‘சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு சிறந்த வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம்’ என்று அந்த அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் தெரிவித்தார்.

சென்னை,

தமிழ்நாடு பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான அணி வீரர்கள் தேர்வுக்கு பிறகு, நடப்பு சாம்பியனான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் உரிமையாளர் பா.சிவந்தி ஆதித்தன் நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்து கூறியதாவது:-

நாங்கள் ஒரு நேர்த்தியான வியூகத்துடன் தான் வீரர்கள் தேர்வுக்கு போனோம். கடந்த வருடங்களை போல் நிறைய ஆல்-ரவுண்டர்களை அணிக்கு எடுக்க திட்டமிட்டு இருந்தோம். அது மாதிரி தான் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறோம். அணிக்கு எந்த மாதிரியான வீரர்கள் தேவையோ? அதற்கு தகுந்தபடி எடுத்து இருக்கிறோம். ஒரு சிறப்பான அணியை தேர்வு செய்துள்ளோம். நாங்கள் நடப்பு சாம்பியன் என்பதால் கடந்த ஆண்டு அணியில் இடம் பிடித்த வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று நினைத்தோம். தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி விதிமுறையில் மாற்றம் செய்ததால் எங்களால் வீரர்களை முழுமையாக தக்க வைக்க முடியாமல் போய்விட்டது. இந்த விதிமுறை மாற்றத்தால் அணிகள் இடையிலான போட்டி மேலும் வலுப்பெறும்.

தமிழ்நாடு பிரிமியர் லீக் போட்டி வணிகரீதியாக 2 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நிலையில் தான் இருக்கிறது. வெளிமாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வீரர்களை வாங்க அனுமதித்தால் இந்த போட்டி மேலும் முன்னேற்றம் காணும் என்று எதிர்பார்க்கிறேன். தற்போதைய வீரர்கள் தேர்வு நடைமுறையில் வீரர்களை தேர்வு செய்வது என்பது சற்று கடினமானது. குறிப்பிட்ட ஒரு வீரரை எடுக்க நினைத்தால் முடியாது. இருப்பினும் இது தான் தமிழ்நாட்டின் தலைசிறந்த கிரிக்கெட் லீக் போட்டியாகும்.

கடந்த ஆண்டில் எங்கள் அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் நல்வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். அதேநேரத்தில் கடந்த ஆண்டில் இடம்பெற்ற எல்லா வீரர்களையும் மீண்டும் அணியில் சேர்க்க முடியாமல் போனது வருத்தம் அளிக்கிறது. வீரர்கள் தேர்வு செய்யும் முறையில் மாற்றம் செய்தால் நன்றாக இருக்கும். ஐ.பி.எல். போல் வீரர்களை ஏலத்தில் எடுக்கவோ? அல்லது இங்கிலாந்து மற்றும் ஸ்பெயின் லீக் கால்பந்து ஆட்டங்களில் உள்ளது போல், வீரர்களை அணிகள் நேரடியாக ஒப்பந்தம் செய்யவோ? அனுமதித்தால் நன்றாக இருக்கும். அப்படி செய்தால், ஒரு உரிமையாளராக மட்டுமின்றி ஒரு வீரரின் மனநிலையில் இருந்து பார்த்தால் கூட ஒரு வீரர் தான் விரும்பிய அணியில் விளையாட முடியும். சில அணிகளின் உரிமையாளர்கள் மாறி இருப்பது பிரச்சினை இல்லை. எங்கள் அணி தொடரும். விஜய் சங்கர், இந்தியா ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இருப்பதால் அவர் போட்டியில் இரண்டாம் பாதியில் தான் விளையாடுவார். அவர் இல்லாத நேரத்தில் கோபிநாத் கேப்டனாக இருப்பார்.

இவ்வாறு பா.சிவந்தி ஆதித்தன் கூறினார்.

Next Story