இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’
x
தினத்தந்தி 1 Jun 2018 10:45 PM GMT (Updated: 1 Jun 2018 9:53 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் பாகிஸ்தான் அணி 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

லீட்ஸ்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே லார்ட்சில் நடந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்த பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாகிஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்-ஹக் ரன் எதுவும் எடுக்காமலும், அஷார் அலி 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். பின்னர் வந்த வீரர்களில் ஷதாப் கான் (56 ரன்) மட்டுமே ஓரளவு நிலைத்து நின்று ஆடினார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 48.1 ஓவர்களில் 174 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ்வோக்ஸ் தலா 3 விக்கெட்டும், சாம் குர்ரன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 37 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது. ஜென்னிங்ஸ் 29 ரன்னிலும், அலஸ்டயர் குக் 46 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கேப்டன் ஜோரூட் 29 ரன்னுடனும், டோமினிச் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் நின்றனர்.

Next Story