இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கு தயாராவது பற்றி தேசிய தேர்வு குழுவுடன் பேசுவேன்; அஜிங்கியா ரஹானே
இங்கிலாந்தில் நடைபெற உள்ள டெஸ்ட் தொடருக்கு தயாராவது பற்றி தேசிய தேர்வு குழுவுடன் பேச உள்ளேன் என இந்திய டெஸ்ட் கேப்டன் அஜிங்கியா ரஹானே கூறியுள்ளார்.
பெங்களூரு,
இந்திய அணி இங்கிலாந்து நாட்டில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20 சர்வதேச போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இப்போட்டிகள் ஜூலை 3ந்தேதியில் இருந்து தொடங்கும். ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் அஜிங்கியா ரஹானே இந்த போட்டிகளில் விளையாடவில்லை.
தொடர்ந்து ஆகஸ்டு 1ந்தேதியில் இருந்து டெஸ்ட் தொடரிலும் இந்திய அணி விளையாடுகிறது. அதில் ரஹானே விளையாடுகிறார். இந்நிலையில், ஒன்றரை மாதங்கள் விளையாடாமல் இருக்க வேண்டிய சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள உள்ளீர்கள்? என அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த ரஹானே, இந்த டெஸ்ட் போட்டிக்கு (ஆப்கானிஸ்தானுக்கு எதிரானது) பின் என்ன நடக்க போகிறது என எனக்கு தெரியாது. ஆனால் தேசிய தேர்வு குழுவினருடன் இங்கிலாந்துக்கு எதிரான போட்டி தொடருக்கு தயாராவது பற்றி நிச்சயம் நான் பேசுவேன் என கூறினார்.
ஒவ்வொரு தொடருக்கு முன்பும் எப்பொழுதும் நான் தீவிரமுடன் தயாராவேன். இந்த டெஸ்ட் போட்டியின் மீது கவனம் செலுத்தி வருகிறேன். இதில் வெற்றி பெற வேண்டியது அவசியம் என கூறியுள்ளார்.