வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட உமர் அக்மல் - பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ்


வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட உமர் அக்மல் - பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ்
x
தினத்தந்தி 25 Jun 2018 10:11 PM GMT (Updated: 25 Jun 2018 10:11 PM GMT)

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூதாட்ட முயற்சி நடந்ததாக வாயை கொடுத்து வம்பில் மாட்டிக் கொண்ட உமர் அக்மலுக்கு பாகிஸ்தான் வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

லாகூர்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான உமர் அக்மல், அந்த நாட்டில் உள்ள டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், 2015-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்துக்கு முன்பாக சூதாட்டத்தில் ஈடுபட தன்னை அணுகியதாகவும், 2 பந்துகளை அடிக்காமல் விட்டால் ரூ.1.36 கோடி வரை தர தயார் என்று சூதாட்டக்காரர்கள் தெரிவித்ததாகவும், அதை ஏற்க திட்டவட்டமாக மறுத்து விட்டதாகவும் கூறினார். வீரர்களை, சூதாட்டக்காரர்கள் யாரும் அணுகினால் அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட கிரிக்கெட் வாரியத்துக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் உமர் அக்மல் அப்படி தகவல் எதுவும் தெரிவித்ததாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஐ.சி.சி. விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சார்பில் உமர் அக்மலுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்னிலையில் நாளை ஆஜராகி சூதாட்டம் குறித்து கூறிய கருத்துக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உமர் அக்மல் குறிப்பிட்ட அந்த ஆட்டத்தில் அவர் 4 ரன்னில் ஆட்டம் இழந்ததோடு, அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் மண்ணை கவ்வியதும் குறிப்பிடத்தக்கது.

Next Story