புதிய விதிமுறை வழக்கு: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு


புதிய விதிமுறை வழக்கு: மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 5 July 2018 9:00 PM GMT (Updated: 5 July 2018 8:32 PM GMT)

லோதா கமிட்டி சிபாரிசுகளின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016–ம் ஆண்டில் உத்தரவிட்டது.

புதுடெல்லி,

லோதா கமிட்டி சிபாரிசுகளின் அடிப்படையில் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2016–ம் ஆண்டில் உத்தரவிட்டது. லோதா கமிட்டி சிபாரிசுகளில் இடம் பெற்ற ‘ஒரு மாநில கிரிக்கெட் சங்கத்துக்கு ஒரு ஓட்டு. நிர்வாகிகளுக்கான வயது உச்ச வரம்பு, ஒருவர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாத வகையில் பதவிக்கான கால இடைவெளி கட்டாயம் விடப்பட வேண்டும்’ என்பது உள்ளிட்ட சில சிபாரிசுகளை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் இருப்பதாக இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் சார்பில் கோர்ட்டில் முறையிடப்பட்டன. இதில் சில அம்சங்களை பரிசீலனை செய்வதாக கூறிய சுப்ரீம் கோர்ட்டு, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைகளை உருவாக்க தங்களது கருத்துகளை, கோர்ட்டுக்கு இந்த விவகாரத்தில் உதவ நியமிக்கப்பட்ட வக்கீல் மூலம் மனுவாக தாக்கல் செய்யலாம் என்று தெரிவித்து இருந்தது. இதைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் தங்களது கருத்துகளை கோர்ட்டில் தாக்கல் செய்து இருந்தன. இதன் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் கான்வில்கர், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் நடைபெற்றது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள், ‘இந்திய கிரிக்கெட் வாரிய விதிமுறை தொடர்பான வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்துள்ளோம்’ என்று அறிவித்தனர். அத்துடன் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் வரை எந்தவொரு மாநில கிரிக்கெட் சங்கமும் தேர்தல் நடத்தவும் நீதிபதிகள் தடை விதித்தனர்.


Next Story