இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி


இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்திய அணி
x
தினத்தந்தி 8 July 2018 4:42 PM GMT (Updated: 8 July 2018 4:42 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மாவின் அதிரடி சதத்தால் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது. #IndVsEng

பிரிஸ்டல்,

இந்தியா- இங்கிலாந்து இடையேயான 3-வது மற்றும் கடைசி இருபது ஓவர் போட்டி பிரிஸ்டலில் நடைபெற்றது.

முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் ஐசன்ராய் 67, பட்லர் 34, ஹேங்ஸ் 30 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.  இதனை தொடர்ந்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இந்தியஅணி களமிறங்கியது.

இந்நிலையில் போட்டி தொடங்கிய 2-வது ஓவரில் ஷிகர் தவான் 5 ரன்களில் வெளியேற, அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல் ரோகித் சர்மாவுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடி ஆட்டத்தில் ஈடுபட இந்திய அணி 4-வது ஓவரிலேயே 50 ரன்களை கடந்தது. சிறிது நேரத்தில் ராகுல் 19 ரன்களில் ஜேக் பால் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேற கேப்டன் விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் கை கோர்த்தார். இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தடினர். குறிப்பாக ரோகித் சர்மா இங்கிலாந்து அணியினரின் பந்து வீச்சுக்கு தக்க பதிலடி கொடுத்து பந்தை சிக்ஸருக்கும், பவுண்டரிக்கும் விரட்டினார்.

ஒரு புறம் இந்திய அணியின் ரன் வேகம் ஜெட் வேகத்தில் உயர, மறுபுறம் ரோகித் சர்மா வெளுத்து வாங்க சொந்த மண்ணில் திணறி போன இங்கிலாந்து அணியினர் வாய்விட்டு புலம்ப ஆரம்பித்தனர். இந்நிலையில் கேப்டன் விராட் கோலி (43 ரன்கள், 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) ஜோர்டான் பந்து வீச்சில் அவுட் ஆக, பாண்டியா களத்திற்குள் நுழைந்தார்.

தொடர்ந்து அதிரடி காட்டி வந்த ’ஹிட் மேன்’ ரோகித் சர்மா 56 பந்துகளில் சதம் அடித்து இந்திய ரசிகர்களை உற்சாகபடுத்தினார். இறுதியாக இந்திய அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ரன்கள் குவித்து, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில்  2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்திய அணியின் ’ஹிட் மேன்’ ரோகித் சர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் (5 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்) குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் வில்லே, ஜேக் பால் மற்றும் ஜோர்டான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

Next Story