நான் என்ன பைத்தியமா? குல்தீப் யாதவால் டென்ஷனான டோனி


நான் என்ன பைத்தியமா? குல்தீப் யாதவால் டென்ஷனான டோனி
x
தினத்தந்தி 11 July 2018 2:35 PM GMT (Updated: 11 July 2018 2:35 PM GMT)

நான் என்ன பைத்தியமா? என்று குல்தீப் யாதவை இந்திய அணியின் கூல் கேப்டன் என்று வர்ணிக்கப்பட்ட டோனி கடிந்து கொண்ட சம்பவம் நடைபெற்றுள்ளது.


இந்திய அணியின் முன்னாள் கேப்டன் டோனி, களத்தில் மிகவும் அமைதியாக செயல்படுவதோடு, எந்த நெருக்கடியான நேரத்திலும் பதட்டமன்றி நிதானமாக செயல்பட்டு ஆட்டத்தின் போக்கை மாற்றும் திறன் படைத்தவர். இதனால், டோனியை கேப்டன் கூல் என்று அவரது ரசிகர்கள் புகழ்வது உண்டு. இருந்த போதிலும், டோனி சில நேரங்களில், தனது அமைதியை இழந்து ஆக்ரோஷம் காட்டுவதை அரிதாக சில  இடங்களில் காண முடிந்துள்ளது. 

அதுபோலத்தான், கடந்த ஆண்டு இலங்கைக்கு எதிராக இந்தூரில் நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில், இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த குல்தீப் யாதவ், டோனி தன்னை கடிந்து கொண்ட சம்பவத்தை வெளியிட்டுள்ளார். குல்தீப் யாதவ் கூறியதாவது:- இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் தொடரில், விராட் கோலி பங்கேற்காததால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்தியா அணி விளையாடியது.

இரண்டாவது இருபது ஓவர் போட்டியின் போது குல்தீப் யாதவின் பந்துகளில், இலங்கை அணி வீரர்கள் ரன்கள் குவித்து கொண்டிருந்தனர். “ஒவ்வொரு முறையும் என்னுடைய பந்து சிக்சர் செல்லும் போது, நான் தோனியைப் பார்ப்பேன். நான்காவது ஓவர் வீசும் போது, இலங்கை அணி வீரர் பவுண்டரி விளாசினார். அப்போது தோனி என்னை அழைத்து ‘கவரை நீக்கிவிட்டு விக்கெட்டை கைப்பற்ற முயற்சி செய்’ என்று தோனி அறிவுறுத்தினார்”

ஆனால், தோனியின் அறிவுறையை நான் கேட்க மறுத்த போது கோபமான தோனி, 'நான் என்ன பைத்தியமா? 300 ஒரு நாள் போட்டிகளில் நான் விளையாடியுள்ளேன்’ என்று கடிந்து கொண்டார்.  அதன் பிறகு ஃபீல்டிங் முறைகளை மாற்றி அமைத்த பின், ஒரு விக்கெட் வீழ்ந்தது”  இவ்வாறு அவர் தெரிவித்தார். 

Next Story