3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி :வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை


3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி :வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி இல்லை
x
தினத்தந்தி 11 July 2018 10:15 PM GMT (Updated: 11 July 2018 10:02 PM GMT)

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது.

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லையில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் முதல்முறையாக வெளிமாநில வீரர்கள் 16 பேர் பங்கேற்க தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி அளித்தது. ஆனால் இதற்கு இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி ஒப்புதல் அளிக்க மறுத்தது. இதனை அடுத்து டி.என்.பி.எல். நிர்வாகம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. டி.என்.பி.எல். நிர்வாகம் சார்பில் ஆஜரான சீனியர் வக்கீல் ரஞ்சித் குமார் ‘வெளிமாநில வீரர்கள் டி.என்.பி.எல். போட்டியில் பங்கேற்க தங்களது மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்கி சமர்பித்து இருக்கிறார்கள். எனவே அவர்களை இந்த போட்டியில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்’ என்று வாதிட்டார். ‘2009-ம் ஆண்டில் இருந்து இதுபோன்ற போட்டிகளில் வெளிமாநில வீரர்கள் விளையாட அனுமதி அளிப்பது கிடையாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறைக்கு உட்பட்டே நிர்வாக கமிட்டி இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது’ என்று நிர்வாக கமிட்டி தரப்பில் ஆஜரான வக்கீல் பராக் திரிபாதி எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘மற்ற மாநிலங்களில் பதிவு செய்த கிரிக்கெட் வீரர்களை டி.என்.பி.எல். போட்டியில் பங்கேற்க அனுமதிக்க முடியாது. மற்றபடி நிர்வாக கமிட்டி ஏற்கனவே அளித்த அனுமதிக்கு ஏற்ப திட்டமிட்டபடி போட்டியை நடத்தி கொள்ளலாம்’ என்று உத்தரவிட்டனர்.

Next Story