டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை


டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்தது மதுரை
x
தினத்தந்தி 22 July 2018 11:15 PM GMT (Updated: 22 July 2018 8:36 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்து மதுரை அணி 2–வது வெற்றியை சுவைத்தது.

நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பலம் வாய்ந்த தூத்துக்குடி அணிக்கு அதிர்ச்சி அளித்து மதுரை அணி 2–வது வெற்றியை சுவைத்தது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தத்தில் நேற்று மாலை நடந்த 11-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், மதுரை பாந்தர்சும் மோதின. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த தூத்துக்குடி அணிக்கு குறிப்பிட்ட இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. ரன்வேகமும் சீராகவே நகர்ந்தது. கேப்டன் கவுசிக் காந்தி 11 ரன்னிலும், தினேஷ் 35 ரன்களிலும் வெளியேறினர்.

தூத்துக்குடி 165 ரன்

இதைத் தொடர்ந்து 3–வது விக்கெட்டுக்கு கைகோர்த்த ஆனந்தும் (44 ரன், 35 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), சீனிவாசனும் (42 ரன், 29 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். இறுதிகட்டத்தில் மதுரை பவுலர்கள் சாமர்த்தியாக பந்து வீசினர். அதாவது ஸ்டம்பை குறி வைக்காமல் ஆப்–சைடுக்கு சற்று அதிகமாக வெளியே வீசினர். அதை அடித்து ஆட முடியாமல் தூத்துக்குடி வீரர்கள் தடுமாறினர். மதுரை பவுலர்களின் இந்த யுக்தியை கடைசி ஓவரில் ஆல்–ரவுண்டர் சதீஷ் தகர்த்தார். இதே போன்று பவுலிங் செய்த கிரன் ஆகாஷின் பந்து வீச்சில் ஆப்–சைக்கு நகர்ந்து சென்று பந்தை இரண்டு முறை ‘பைன்லெக்’ பகுதியில் சிக்சருக்கு பறக்கவிட்டார். ஒரு பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று காணாமல் போய் விட்டது. இன்னொரு முறையும் பந்தை சிக்சருக்கு தூக்கினார்.

20 ஓவர் முடிவில் தூத்துக்குடி அணி 5 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. சதீஷ் 24 ரன்களுடன் (10 பந்து, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். மதுரை வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வர் 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

மதுரை வெற்றி

பின்னர் களம் புகுந்த மதுரை அணிக்கு அருண் கார்த்திக்கும், கேப்டன் ரோகித்தும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்தி வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்டனர். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 71 ரன்கள் (8.2 ஓவர்) சேர்த்த நிலையில் பிரிந்தனர். ரசிகர்களுக்கு விருந்து படைத்த ரோகித் 28 ரன்களும், 6–வது அரைசதத்தை எட்டிய அருண் கார்த்திக் 59 ரன்களும் (42 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினர். அடுத்து வந்த சந்திரன் (29 ரன்), ஜே.கவுசிக் ஆகியோரும் ரன்ரேட்டை குறையாமல் பார்த்துக் கொண்டனர். தூத்துக்குடி கேப்டன் 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் மதுரை பேட்ஸ்மேன்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

19–வது ஓவரில் பவுண்டரி, சிக்சருடன் ஜே.கவுசிக் இன்னிங்சை வெற்றிகரமாக முடித்து வைத்தார். மதுரை அணி 18.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜே.கவுசிக் 38 ரன்களுடன் (22 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். தூத்துக்குடி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 3–வது ஆட்டத்தில் ஆடிய தூத்துக்குடி சந்தித்த முதல் தோல்வி இதுவாகும்.

கேப்டன் கருத்து

அதே சமயம் 3–வது லீக்கில் விளையாடிய மதுரை அணிக்கு இது 2–வது வெற்றியாகும். ஏற்கனவே நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீசையும் தோற்கடித்து இருந்தது. முதல் இரு ஆண்டில் எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத மதுரை பாந்தர்ஸ் அணி, இந்த சீசனில் இந்நாள் சாம்பியனையும், முன்னாள் சாம்பியனையும் வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

மதுரை கேப்டன் ரோகித் கூறுகையில், ‘இரு சாம்பியன் அணிகளை வீழ்த்தி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும் இத்துடன் திருப்திபட்டு விடமாட்டோம். மேலும் வெற்றிகளை குவிக்கும் வேட்கையில் இருக்கிறோம்’ என்று குறிப்பிட்டார்.


Next Story