டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி 2-வது வெற்றி


டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் திருச்சியை வீழ்த்தி கோவை கிங்ஸ் அணி 2-வது வெற்றி
x
தினத்தந்தி 23 July 2018 11:04 PM GMT (Updated: 23 July 2018 11:04 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி வாரியர்ஸ் அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை ருசித்தது.

நத்தம்,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தத்தில் நேற்று இரவு நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ்-கோவை கிங்ஸ் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த கோவை கிங்ஸ் அணி கேப்டன் அபினவ் முகுந்த் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த திருச்சி வாரியர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பரத் சங்கர், கேப்டன் பாபா இந்திரஜித் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

அணியின் ஸ்கோர் 3.3 ஓவர்களில் 24 ரன்னை எட்டிய போது கேப்டன் பாபா இந்திரஜித் (3 ரன்) அஜித் ராம் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் அவுட் ஆனார். கோவை கிங்ஸ் அணியினரின் சிறப்பான பந்து வீச்சில் திருச்சி வாரியர்ஸ் அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்த வண்ணம் இருந்தன. எந்தவொரு வீரரும் நிலைத்து நிற்கவில்லை.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருச்சி வாரியர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சுரேஷ்குமார் 35 ரன்னும் (33 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்), பரத் சங்கர் 24 ரன்னும் (17 பந்துகளில் 4 பவுண்டரியுடன்), சோனு யாதவ் 21 ரன்னும் (20 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), லட்சுமி நாராயணன் 11 ரன்னும், விக்கெட் கீப்பர் மணிபாரதி 10 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் அவுட் ஆகி வந்த வேகத்திலேயே வெளியேறினார்கள். டி.குமரன் 7 ரன்னுடனும், கே.விக்னேஷ் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் நின்றனர். கோவை கிங்ஸ் அணி தரப்பில் அஜித் ராம், மணிகண்டன் தலா 2 விக்கெட்டும், கே.விக்னேஷ், டி.நடராஜன், பிரசாந்த் ராஜேஷ் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 125 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய கோவை கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் அபினவ் முகுந்த், ஷாருக்கான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடி அணியை வெற்றி இலக்கை நோக்கி வேகமாக பயணிக்க வைத்தனர். அணியின் ஸ்கோர் 11 ஓவர்களில் 96 ரன்னாக உயர்ந்த போது ஷாருக்கான் (67 ரன்கள், 40 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன்) டி.குமரன் பந்து வீச்சில் சோனு யாதவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த அந்தோணி தாஸ் (7 ரன்) டி.குமரன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மணிபாரதியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

13.4 ஓவர்களில் கோவை கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அபினவ் முகுந்த் 35 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 42 ரன்னும், ரோகித் ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய கோவை கிங்ஸ் அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். முதல் 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்று இருந்த திருச்சி வாரியர்ஸ் அணி சந்தித்த முதல் தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story