வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியா விளங்கும்


வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியா விளங்கும்
x
தினத்தந்தி 29 July 2018 10:44 PM GMT (Updated: 29 July 2018 10:44 PM GMT)

வெளிநாட்டில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியா விளங்கும் என்று பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

பர்மிங்காம்,

இங்கிலாந்துக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது. இதையொட்டி இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி, இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நாங்கள் அற்புதமாக ஆடினோம். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை சில மாதங்களுக்கு முன்பு தென்ஆப்பிரிக்க மண்ணில் ஓரளவு நன்றாகவே செயல்பட்டோம். அதே உத்வேகத்தை இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கும் கொண்டு செல்ல விரும்புகிறோம். வெளிநாட்டு மண்ணிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்துவதே எங்களுக்கு உள்ள சவாலாகும்.

வெளிநாட்டு மண்ணில் சிறப்பாக விளையாடும் அணிகளில் ஒன்றாக இந்தியாவால் திகழ முடியும். அதற்குரிய திறமை நம்மிடம் இருப்பதாக நம்புகிறோம். ஆனால் இன்றைய சூழலில் வெளிமண்ணில் எந்த அணியும் பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தவில்லை. இலங்கையில், தென்ஆப்பிரிக்க அணிக்கு (டெஸ்ட் தொடரில் தோல்வி) என்ன நடந்தது என்பதை பார்த்து இருப்பீர்கள்.

2011-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு சென்ற போது 0-4 என்ற கணக்கில் தோற்றோம். 2014-ம் ஆண்டு 1-3 என்ற கணக்கில் தொடரை இழந்தோம். இந்த முறை அதை விட சிறந்த முடிவு காணும் ஆவலில் உள்ளோம். அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களில் பெரும்பாலானவர்களுக்கு இதற்கு முன்பு இங்கிலாந்து மண்ணில் விளையாடிய அனுபவம் உண்டு. நிறைய கற்று இருக்கிறார்கள். இதை சாதகமான அம்சமாக பார்க்கிறோம்.

இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் விளையாடும் போது முதல் 20 முதல் 25 ஓவர்கள் தான் மிகவும் முக்கியம். தொடக்க கட்ட ஓவர்களை சமாளித்து விட்டால் அதன் பிறகு வலுவான அடித்தளம் அமைத்து விடலாம். தொடக்க வீரர்கள் அதை புரிந்து கொண்டு ஆட வேண்டும்.

இந்த தொடருக்காக 3-வது தொடக்க ஆட்டக்காரராக லோகேஷ் ராகுலை தேர்வு செய்துள்ளோம். ஆனால் எங்களது பேட்டிங் வரிசை எப்போதும் மாற்றம் செய்வதற்கு ஏற்ப சவுகரியமாக இருக்கக்கூடியது. 3-வது தொடக்க ஆட்டக்காரரை டாப்-4 வரிசையில் எந்த இடத்திலும் பயன்படுத்த முடியும். இவ்வாறு ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

Next Story