டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெளியேற்றம் கடைசி லீக்கில் வெற்றி பெற்றும் பலன் இல்லை


டி.என்.பி.எல். கிரிக்கெட்: தூத்துக்குடி அணி வெளியேற்றம் கடைசி லீக்கில் வெற்றி பெற்றும் பலன் இல்லை
x
தினத்தந்தி 5 Aug 2018 10:00 PM GMT (Updated: 5 Aug 2018 7:50 PM GMT)

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி லீக்கில் காரைக்குடி காளையை தூத்துக்குடி அணி தோற்கடித்த போதிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் கடைசி லீக்கில் காரைக்குடி காளையை தூத்துக்குடி அணி தோற்கடித்த போதிலும் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியவில்லை.

வெற்றியுடன் வெளியேறியது தூத்துக்குடி

3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில், நேற்றிரவு நெல்லையில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி, காரைக்குடி காளையை எதிர்கொண்டது. இதில் முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது.

பின்னர் 165 ரன்கள் இலக்கை 18.4 ஓவருக்குள் எட்டிப்பிடித்தால் மட்டுமே ரன்ரேட்டில் முன்னிலை பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைய முடியும் என்ற நெருக்கடியுடன் தூத்துக்குடி பேட்ஸ்மேன்கள் விளையாடினர். ஆனால் குறிப்பிட்ட ஓவருக்குள் இலக்கை அடைய முடியவில்லை. தூத்துக்குடி அணியால் 19.2 ஓவர்களில் தான் இலக்கை எட்ட முடிந்தது. 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்ற தூத்துக்குடி அணியில் சதீஷ் 57 ரன்கள் (34 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார்.

திருச்சி அணிக்கும் ஆறுதல்

முன்னதாக மாலையில் இதே மைதானத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் திருச்சி வாரியர்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்சை நொறுக்கியது. இதில் காஞ்சி அணி நிர்ணயித்த 137 ரன்கள் இலக்கை திருச்சி அணி பரத் சங்கரின் அதிரடியால் (69 ரன்) 17.4 ஓவர்களில் எட்டியது. அந்த அணிக்கும் இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது.

லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் டாப்–4 இடங்களை பிடித்த திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது. தூத்துக்குடி, திருச்சி, காஞ்சி, சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகள் வெளியேறின.

நாளை நெல்லையில் நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்றில் திண்டுக்கல்–மதுரை அணிகள் மோதுகின்றன.


Next Story