“ஒரு போதும் திருப்தி அடைந்து விடக்கூடாது” - கோலிக்கு, தெண்டுல்கர் அறிவுரை


“ஒரு போதும் திருப்தி அடைந்து விடக்கூடாது” - கோலிக்கு, தெண்டுல்கர் அறிவுரை
x
தினத்தந்தி 8 Aug 2018 11:15 PM GMT (Updated: 8 Aug 2018 8:07 PM GMT)

ஒரு போதும் திருப்தி அடைந்து விடக்கூடாது என கோலிக்கு, தெண்டுல்கர் அறிவுரை வழங்கியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

இந்திய கேப்டன் விராட் கோலி தனது பணியை மிகச்சிறப்பாக செய்து வருகிறார். அதை அப்படியே தொடர வேண்டும். தன்னை சுற்றி என்ன நடக்கிறது, எந்த மாதிரியான விமர்சனங்கள் எழுகிறது என்பதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், என்ன சாதிக்க வேண்டும் என்று விரும்புகிறாரோ அதன் மீது மட்டுமே தொடர்ந்து கவனம் இருக்க வேண்டும். இதயம் அதை நோக்கி உங்களை வழிநடத்தட்டும்.

எனது சொந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன். கிரிக்கெட்டை பொறுத்தவரை எவ்வளவு ரன்கள் குவித்தாலும் போதாது. நிறைய ரன்கள் சேர்க்கும் வேட்கையுடன் கோலி ஆடுகிறார். இருப்பினும் அவர் எவ்வளவு ரன்கள் குவித்தாலும், அது அவருக்கு போதுமானதாக இருக்காது. மனநிறைவு ஏற்படும் போது, அதன் பிறகு சரிவு தொடங்கி விடும். எனவே ஒரு பேட்ஸ்மேனாக ஒருபோதும் திருப்திபட்டு விடக்கூடாது. பந்து வீச்சாளர்களால் 10 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்த முடியும். ஆனால் பேட்ஸ்மேன்கள் அப்படி இல்லை. களம் இறங்கி எத்தனை ரன்கள் வேண்டும் என்றாலும் எடுத்து கொண்டே இருக்க முடியும். எனவே திருப்தி அடைந்து விடாதீர்; மகிழ்ச்சியுடன் இருங்கள். இவ்வாறு தெண்டுல்கர் கூறியுள்ளார்.


Next Story