இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து


இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட்: வலுவான நிலையில் இங்கிலாந்து
x
தினத்தந்தி 11 Aug 2018 11:15 PM GMT (Updated: 11 Aug 2018 7:37 PM GMT)

லண்டனில் நடந்து வரும் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வலுவான நிலையை எட்டியுள்ளது. கிறிஸ் வோக்ஸ் சதம் விளாசி அமர்க்களப்படுத்தினார்.

லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது நாள் ஆட்டமும் மழையால் கணிசமாக பாதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, எதிரணியின் ‘ஸ்விங்’ தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போனது.

35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 107 ரன்னில் சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் மிக குறைந்த ஓவர்களில் முடிந்த முதல் இன்னிங்சில் இது 2-வது இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. காலையில் வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் ஈரப்பதத்தின் தன்மை சற்று குறைந்தது. இதனால் ஓரளவு பேட்டிங்குக்கு உகந்த சூழல் உருவானது.

இங்கிலாந்தின் இன்னிங்சை அலஸ்டயர் குக்கும், கீடான் ஜென்னிங்சும் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் (7.3 ஓவர்) சேர்த்த இவர்களை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பிரித்தார். அவரது பந்தில் ஜென்னிங்ஸ் (11 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து அலஸ்டயர் குக் (21 ரன்), அறிமுக வீரர் ஆலிவர் போப் (28 ரன்), கேப்டன் ஜோ ரூட் (19 ரன்), ஜோஸ் பட்லர் (24 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்சும் வேகப்பந்து வீச்சை மிக கவனமுடன் எதிர்கொண்டு விளையாடியதுடன், அணியை சரிவில் இருந்து படிப்படியாக நிமிர வைத்தனர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் இருவரது பந்துவீச்சிலும் சிரமமின்றி ரன்களை திரட்டினர். போக போக நமது வேகப்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.

இருவரும் நிலைத்து நின்று ஆடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இந்திய வீரர்கள் சோர்ந்து போனார்கள். ஏதோ கடமைக்கு பந்து வீசியது போன்று இருந்தது.

இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கிறிஸ் வோக்ஸ் 129 பந்துகளில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் சதத்தை நெருங்கிய பேர்ஸ்டோ, அணியின் ஸ்கோர் 320 ரன்களை எட்டிய போது, ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். பேர்ஸ்டோ 93 ரன்களில் (144 பந்து, 12 பவுண்டரி) வெளியேறினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து இருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. கிறிஸ் வோக்ஸ் 120 ரன்களுடனும் (159 பந்து, 18 பவுண்டரி), சாம் குர்ரன் 22 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இங்கிலாந்து அணி இதுவரை 250 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் காணப்படுகிறது. இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெறும். லண்டனில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன

6-வது விக்கெட்டுக்கு சாதனை

இங்கிலாந்து வீரர்கள் பேர்ஸ்டோ- கிறிஸ் வோக்ஸ் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 189 ரன்கள் சேகரித்தது. இந்தியாவுக்கு எதிராக 6-வது விக்கெட்டுக்கு இங்கிலாந்து இணை சேர்த்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1980-ம் ஆண்டு மும்பையில் நடந்த டெஸ்டில் இயான் போத்தம்- பாப் டெய்லர் ஜோடி 171 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

Next Story