மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்


மோசமான தோல்வி: இந்திய அணி மீது முன்னாள் வீரர்கள் சாடல்
x
தினத்தந்தி 13 Aug 2018 10:30 PM GMT (Updated: 13 Aug 2018 9:58 PM GMT)

இந்திய அணியின் இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார்.

புதுடெல்லி,

லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்திய அணியின் இந்த தோல்வியை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சனம் செய்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக் தனது டுவிட்டர் பதிவில், ‘இந்திய அணி மிகவும் மோசமான பார்மில் உள்ளது. நன்றாக ஆடாத நேரத்தில் இந்திய அணிக்கு ஆதரவாக இருப்போம் என்றாலும், எந்தவித போராட்டமும் இல்லாமல் இந்திய அணி தோல்வி கண்டது ஏமாற்றம் அளித்தது. நம்பிக்கையுடனும், மன தைரியத்துடன் போராடி இந்திய அணி சரிவில் இருந்து மீளும் என்று நம்புவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் தனது பதிவில், ‘இந்திய அணி சாதகமற்ற சூழ்நிலையில் மாட்டிக்கொண்டது. லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி போராட்டம் அளிக்காமல் சரண் அடைந்தது. இதில் இருந்து நமது அணியினர் விரைவில் பாடம் கற்றுக்கொண்டு, அடுத்த டெஸ்டில் சிறப்பாக விளையாட முயற்சிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வீரர்கள் மஞ்ச்ரேக்கர், முகமது கைப் ஆகியோரும் இந்திய அணியின் தோல்வியை விமர்சித்துள்ளனர்.

Next Story