இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட்: ஹர்திக் பாண்டியாவின் அபார பந்து வீச்சினால் 161 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி


இந்தியா-இங்கிலாந்து 3வது டெஸ்ட்: ஹர்திக் பாண்டியாவின் அபார பந்து வீச்சினால் 161 ரன்களில் சுருண்டது இங்கிலாந்து அணி
x
தினத்தந்தி 19 Aug 2018 3:46 PM GMT (Updated: 19 Aug 2018 3:46 PM GMT)

இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் சிறப்பாக பந்து வீசிய இந்திய அணி, இங்கிலாந்தை 161 ரன்களில் சுருட்டியது. இதன்மூலம் இந்தியா 168 ரன்கள் முன்னிலை பெற்றது. #IndVsEng

நாட்டிங்காம்,

இந்திய கிரிக்கெட் அணி விராட் கோலி தலைமையில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்திலும், லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோல்வி கண்டு தொடரில் 0-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

இந்த நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர். இதில் ஷிகர் தவான் 35(65) ரன்களிலும், அவரைத்தொடர்ந்து லோகேஷ் ராகுல் 23(53) ரன்களிலும், புஜாரா 14(31) ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

அடுத்து களமிறங்கிய ரகானே, விராட் கோலி ஜோடி நிதானமாக விளையாடினர். தனது சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்திய  விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை பதிவு செய்தார். அவரைத் தொடர்ந்து ரகானேவும் 13-வது அரை சதத்தை பதிவு செய்தார்.  பின்னர்  ரகானே 81(131) ரன்களில் வெளியேறிய நிலையில், சதம் அடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 97(152) ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து பாண்ட்யாவும் 18(58) ரன்களில் வெளியேறினார். பின்னர் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 307 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது. 

இந்நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. அணியின் ஸ்கோர் 323 ஆக இருக்கும் போது ரிஷாப் பாண்ட் (24 ரன்கள்) பிராட் பந்து வீச்சில் போல்ட் ஆகி வெளியேற, சிறிது நேரத்தில் அஸ்வினும் நடையை கட்டினார். அடுத்து களமிறங்கிய வீரர்களும் இங்கிலாந்து பந்துவீச்சிற்கு இரையாக இந்திய அணி 329 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன், பிராட் மற்றும் வோக்ஸ் ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். ரஷித் ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 97 ரன்களும், ரகானே 81 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் முதல் இன்னிங்சில் பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் குக் மற்றும் ஜென்னிங்ஸ் நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தி 50 ரன்கள் வரை சேர்த்தனர். இந்நிலையில் அணியின் ஸ்கோர் 54ஆக இருக்கும் போது, இஷாந்த் சர்மா வீசிய வேகப்பந்தில் ரிஷாப் பாண்ட்டிடம் கேட்ச் ஆகி குக் (29 ரன்கள்) பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களத்திற்குள் இங்கிலாந்து கேப்டன் ஜோய் ரூட் நுழைய, பும்ரா பந்துவீச்சில் ஜென்னிங்ஸ்(20 ரன்கள்) கேட்ச் ஆகி வெளியேறினார். இதனிடையே முந்தைய போட்டியில் ஏற்பட்ட படுதோல்வியால், இங்கிலாந்து அணியை காவு வாங்க காத்திருந்த இந்திய அணி, பந்து வீச்சை தனக்கு சாதகமாக்கி இங்கிலாந்து அணி வீரர்களை போட்டு தாக்கியது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சை எப்படி எதிர்கொள்வது? என குழம்பி போன இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுதாரிப்பதற்குள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களால் பெவிலியன் அனுப்பப்பட்டனர். குறிப்பாக ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை மிரட்டினார். களத்தில் ஆட வந்த பேட்ஸ்மேன்கள், இந்திய வீரர்களின் விஸ்வரூபத்தால் வந்த வேகத்தில் கேட்ச் ஆகி வெளியேறினர். இந்நிலையில் 38.5 ஓவர்களில் 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இங்கிலாந்து அணி இழந்தது. அந்த அணியின் ஜோஷ் பட்லர் மட்டும் போராடி 39 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். பும்ரா, இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். முகமது சமி 1 விக்கெட் எடுத்தார். வெறும் 161 ரன்களில் இங்கிலாந்தை ஊதி தள்ளிய இந்திய அணி, 168 ரன்கள் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை துவக்கவுள்ளது.

Next Story