ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியின் போது தோனியை சந்தித்த சோயிப் மாலிக்


ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியின் போது தோனியை சந்தித்த சோயிப் மாலிக்
x
தினத்தந்தி 15 Sep 2018 7:39 AM GMT (Updated: 15 Sep 2018 7:39 AM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சியின் போது இந்திய வீரர் மகேந்திர சிங் தோனியை, பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் சந்தித்து பேசினார். #ShoaibMalik #MSDhoni

துபாய்,

இந்தியா, பாகிஸ்தான் உள்பட 6 அணிகள் பங்கேற்கும் 14-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாயில் இன்று தொடங்குகிறது. வருகிற 28-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 6 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

தனது முதல் லீக்கில் கத்துக்குட்டி அணியான ஹாங்காங்குடன் 18-ந் தேதி மோதும் இந்திய அணி ஓய்வின்றி மறுநாளே 19-ந் தேதி பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமாகிய மகேந்திர சிங் தோனியை, பாகிஸ்தான் அணியின் ஆல் ரவுண்டர் சோயிப் மாலிக் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இருவரும் சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய வீடியோவை ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சுமார் 27 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ காட்சியானது கிரிக்கெட் ரசிகர்களிடையே சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. 

இந்திய மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பல பிரச்சனைகள் இருந்து வந்தாலும் இதுபோன்று கிரிக்கெட் வீரர்கள் ஒருவரை ஒருவர் சந்தித்து மரியாதை செலுத்துவதும், மைதானத்தில் சகஜமாக பேசிக் கொள்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் தொடக்க நாளான இன்று முதல் லீக்கில் இலங்கை- வங்காளதேச அணிகள் துபாயில் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

Next Story