3 ரன் வித்தியாசத்தில் தோல்வி: இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி


3 ரன் வித்தியாசத்தில் தோல்வி:  இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது ஆப்கானிஸ்தான் அணி
x
தினத்தந்தி 24 Sep 2018 10:30 PM GMT (Updated: 24 Sep 2018 8:48 PM GMT)

3 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்திடம் தோல்வி கண்ட ஆப்கானிஸ்தான் அணி, இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது.

அபுதாபி,

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் அபுதாபியில் நேற்று முன்தினம் நடந்த பரபரப்பான ‘சூப்பர்-4’ சுற்று ஆட்டம் ஒன்றில் வங்காளதேச அணி 3 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 20.5 ஓவர்களில் 87 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 6-வது விக்கெட் இணையான மக்முதுல்லா (74 ரன்), இம்ருல் கேயஸ் (ஆட்டம் இழக்காமல் 72) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காளதேச அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 249 ரன்கள் குவித்தது.

பின்னர் 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக ஹஷ்மத்துல்லா ஷஹிதி 71 ரன்னும், முகமது ஷாசாத் 53 ரன்னும் எடுத்தனர். கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அந்த அணியால் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வங்காளதேச அணி தரப்பில் மோர்தசா, முஸ்தாபிஜூர் ரஹ்மான் தலா 2 விக்கெட்டும், ஷகிப் அல்-ஹசன், மக்முதுல்லா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள். வங்காளதேச வீரர் மக்முதுல்லா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

சூப்பர்-4 சுற்றில் முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி கண்டு இருந்த வங்காளதேச அணி முதல் வெற்றியை தனதாக்கியது. மேலும் லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் கண்ட தோல்விக்கும் பதிலடி கொடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இந்த தோல்வியின் மூலம் ஆப்கானிஸ்தான் அணி இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்தது. வெற்றி பெற்ற வங்காளதேச அணி இறுதிப்போட்டி வாய்ப்பில் நீடிக்கிறது.


Next Story