‘வாய்ப்பு வந்தால் கேப்டன் பதவியை ஏற்க தயார்’– ரோகித் சர்மா


‘வாய்ப்பு வந்தால் கேப்டன் பதவியை ஏற்க தயார்’– ரோகித் சர்மா
x
தினத்தந்தி 29 Sep 2018 9:00 PM GMT (Updated: 29 Sep 2018 8:44 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வழக்கமான கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்தினார்.

சிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வழக்கமான கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் ரோகித் சர்மா அணியை வழிநடத்தினார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக மூன்று முறை கோப்பையை வென்றுத்தந்த பெருமையும் 31 வயதான ரோகித் சர்மாவுக்கு உண்டு. அவரிடம், எதிர்காலத்தில் நீண்டகாலம் அடிப்படையில் கேப்டன் பதவியை ஏற்க தயாராக இருக்கிறீர்களா? என்று நிருபர்கள் கேட்ட போது, ‘நிச்சயமாக’ என்று பதில் அளித்தார். மேலும் அவர் கூறியதாவது:–

கேப்டன் பதவியை ஏற்க நான் தயாராக இருக்கிறேன். எப்போது என்னை கேப்டன் பதவி தேடி வந்தாலும், அதற்கு தயாராக இருப்பேன். முன்னணி வீரர்கள் சிலருக்கு ஓய்வு கொடுக்கும் போது அது எந்த ஒரு அணிக்கும் சவாலாகத்தான் இருக்கும். அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பும் போது, அவர்களது இடத்தில் ஆடிய வீரர்கள் வெளியே உட்கார வேண்டி இருக்கும். எல்லா அணிகளிலும் இது நடப்பது தான். வீரர்களும் அதை புரிந்து கொண்டுள்ளனர். எது முக்கியமான வி‌ஷயம் என்றால் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் போதெல்லாமல் அவர்கள் களத்தில் எந்தவித நெருக்கடியும் இன்றி சுதந்திரமாக விளையாட வேண்டும் என்பதை கேப்டனும், பயிற்சியாளரும் உறுதி செய்ய வேண்டும்.

டோனி கேப்டனாக இருந்தபோதெல்லாம் அவர் அந்த பொறுப்பில் எவ்வாறு செயல்படுகிறார் என்பதை உற்று நோக்கி இருக்கிறேன். அவர் ஒரு போதும் அவசரகதியில் முடிவு எடுத்ததில்லை. அதே போல் பதற்றத்தை முகத்தில் காட்டியதும் கிடையாது. நானும் அதே பாணியைத்தான் பின்பற்றுகிறேன். எந்த முடிவு என்றாலும் முதலில் சிந்தித்து, அதன் பிறகு களத்தில் செயல்படுத்துகிறேன். அதிலும் 50 ஓவர் போட்டி என்கிற போது முடிவு எடுக்க நமக்கு அதிக நேரம் கிடைக்கிறது. இது போன்ற நுணுக்கங்களை டோனியிடம் இருந்து தான் கற்று இருக்கிறேன். அவரது தலைமையின் கீழ் நான் ஏராளமான போட்டிகளில் விளையாடி இருக்கிறேன். ஏதாவது ஒரு சின்ன பிரச்சினை, குழப்பம் ஏற்பட்டாலும் உடனடியாக வந்து ஆலோசனை சொல்வார்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

Next Story