ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன்? - இந்திய கேப்டன் கோலி விளக்கம்


ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன்? -  இந்திய கேப்டன் கோலி விளக்கம்
x
தினத்தந்தி 3 Oct 2018 11:00 PM GMT (Updated: 3 Oct 2018 7:40 PM GMT)

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது ஏன் என இந்திய கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

ராஜ்கோட்,

டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த சாதனையாளரான இந்திய பேட்ஸ்மேன் கருண் நாயர் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வாகி இருந்தார். ஆனால் ஒரு போட்டியிலும் களம் இறக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடருக்கும் அவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். ஒரு டெஸ்டில் கூட வாய்ப்பு வழங்காமல் அவரை கழற்றி விட்டதை முன்னாள் வீரர்கள் கங்குலி, ஹர்பஜன்சிங், ஷேவாக் உள்ளிட்டோர் கண்டித்தனர்.

இந்த நிலையில் கருண் நாயர் விவகாரம் குறித்து முதல்முறையாக இந்திய கேப்டன் விராட் கோலி கருத்து தெரிவித்துள்ளார். அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

வீரர்களை தேர்வு செய்வது என்னுடைய வேலை அல்ல. எங்களுக்கு என்ன விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை ஒரு அணியாக செய்கிறோம். ஒவ்வொரு வீரர்களும் தங்களது பணி என்ன என்பதை அறிந்திருக்க வேண்டும்.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கருண் நாயர் ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவினர் ஏற்கனவே தெரிவித்து விட்டனர். அது குறித்து தனிப்பட்ட முறையில் கருண்நாயரிடம் அவர்கள் பேசியுள்ளனர். எனவே இதில் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. 3 பேர் கொண்ட தேர்வு குழுவினர் அவர்களது வேலையை செய்கிறார்கள். வெளியில் உள்ளவர்கள் எதை வேண்டுமானாலும் பேசிக்கொள்ளட்டும். அது பற்றி கவனத்தில் கொள்ளாமல், நமது பணியை சரியாக செய்ய வேண்டும்.

கருண் நாயர் தேர்வு செய்யப்படாததற்கும் எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. வீரர்கள் தேர்வு என்பது அனைவரும் கூட்டாக சேர்ந்து எடுக்கும் முடிவு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதே போல் எல்லாமே (வீரர்கள் தேர்வு) ஒரு இடத்தில் இருந்து தான் நடக்கிறது என்று நினைத்தால் அது தவறானதாகும்.

ஓய்வு எடுத்தது ஏன்?

ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தது குறித்து கேட்கிறீர்கள். தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து போன்ற தீவிரம் மிகுந்த தொடர்களுக்கு பிறகு எனக்கு ஓய்வு தேவைப்பட்டது. இப்போது பணிச்சுமை குறித்து மக்கள் சாதாரணமாக பேசுகிறார்கள். ஆனால் பணிச்சுமை என்றால் என்ன? என்பதை அவர்கள் முழுமையாக புரிந்து கொள்ளவில்லை. எவ்வளவு ஆட்டங்களில் ஆடுகிறார்கள் என்பதை வைத்தே பணிச்சுமையை கணக்கிடுகிறார்கள். ஒரு ஆட்டத்தில் களம் இறங்கி நான் டக்-அவுட் ஆனால் பணிச்சுமை இல்லை. ஆனால் 6 மணி நேரம் பேட் செய்தால் அது தான் பணிச்சுமை.

முதுகு பிரச்சினை இருப்பதால் ஓய்வு அவசியமாகப்பட்டது. உலக கோப்பை போட்டி நெருங்கும் சமயத்தில் இது போன்ற விஷயங்களை முக்கியமாக பரிசீலிக்க வேண்டி இருக்கிறது. வீரர்களுக்கு போதுமான ஓய்வு அளிக்கும் போது, அது அவர்கள் வலுவுடன் திரும்புவதற்கு உதவிகரமாக இருக்கும். ஏனெனில் முக்கியமான கட்டத்தில் அவர்கள் காயமடைந்து விடக்கூடாது.

நாங்கள் தொடக்க வரிசையை மாற்றியுள்ளோம். புதிய வீரர்களுக்கு போதுமான வாய்ப்பு வழங்கி, அந்த வரிசையில் சவுகரியமாக உணரும்படி செய்வோம். அவர்கள் என்ன செய்கிறார்களோ அதை நம்பிக்கையுடன் செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்.

பின்வரிசை பங்களிப்பு எப்போதும் முக்கியமானது. அதில் மாற்றம் செய்ய வேண்டிய தேவையில்லை. பின்வரிசையில் ரிஷாப் பான்ட் புதியவர். மற்றபடி அஸ்வின், ஜடேஜா ஆகியோர் உள்ளூரில் பேட்டிங்கில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். இதே போல் அவர்கள் வெளிநாட்டிலும் அசத்த வேண்டும். பின்வரிசை பேட்ஸ்மேன்கள் நிறைய ரன்கள் எடுத்ததால் தான் நமக்கு எதிரான தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் தொடக்க வரிசை நிலையாக அமைய வேண்டும் என்பதை தவிர வேறு எந்த பிரச்சினையும் இருப்பதாக தெரியவில்லை என்று விராட் கோலி கூறினார்.


Next Story