மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் அறிமுக போட்டியில் சதம் விளாசிய பிரித்வி ஷா


மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்  அறிமுக போட்டியில் சதம் விளாசிய பிரித்வி ஷா
x
தினத்தந்தி 4 Oct 2018 8:57 AM GMT (Updated: 4 Oct 2018 8:57 AM GMT)

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடக்க வீரர் பிரித்வி ஷா சதம் விளாசினார்.

ராஜ்கோட்:

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று காலை தொடங்கியது.  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ராகுலும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேப்ரியல் வீசிய முதல் ஓவரின் கடைசி பந்தில் ராகுல் எல்பிடபிள்யூ ஆனார். அம்பயர் அவுட் கொடுத்ததும், பிரித்வியுடன் ஆலோசித்துவிட்டு ரிவியூ கேட்டார் ராகுல். ரிவியூவில் அவுட் உறுதியானதால், ராகுல் டக் அவுட்டாகி வெளியேறினார். ஒரு ரிவியூவும் வீணானது. இதையடுத்து பிரித்வியுடன் புஜாரா ஜோடி சேர்ந்து ஆடினார்.

இருவருமே நிதானமாகவும் அதேநேரத்தில் தெளிவாக அடித்தும் ஆடினர். அதிலும் அறிமுக போட்டியில் ஆடிவரும் பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பந்தாடி பவுண்டரிகளை விளாசிவருகிறார். பயமோ பதற்றமோ இல்லாமல் தொடக்கம் முதலே அடித்து ஆடிய பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் அரைசதம் கடந்தார். வழக்கமாக நிதானமாக ஆடி பொறுமையாக ரன்களை சேர்க்கும் புஜாரா, இந்த போட்டியில் அடித்து ஆடி ரன்களை சேர்த்துவருகிறார்.

முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை வரை பிரித்வி ஷா 75 ரன்களும் புஜாரா 56 ரன்களும் எடுத்திருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி மீண்டும் ரன்களை குவிக்க தொடங்கியது. உணவு இடைவேளை முடிந்து வந்ததும் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய பிரித்வி, தொடர்ந்து சிறப்பாக ஆடி, அறிமுக போட்டியிலேயே சதம் விளாசினார்.

99 பந்துகளில் சதம் அடித்தார் பிரித்வி ஷா. 15 பவுண்டரிகளை விளாசி சதமடித்தார் பிரித்வி. பிரித்வி ஒருபுறம் பவுண்டரிகளாக விளாசினால், மறுபுறம் புஜாராவும் பவுண்டரிகளை விளாசினார். பிரித்வி 15 பவுண்டரிகளும் புஜாரா 14 பவுண்டரிகளும் விளாசி ஆடிவருகின்றனர். பிரித்வி சதம் கடந்துவிட்ட நிலையில், புஜாரா 85  ரன்களை கடந்து ஆடிவருகிறார். அவரும் சதத்தை நோக்கி சென்றுகொண்டிருக்கிறார்.

இந்திய அணி 39 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்து இந்திய அணி ஆடிவருகிறது.

Next Story