ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது


ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம் பரபரப்பான ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது
x
தினத்தந்தி 4 Oct 2018 10:00 PM GMT (Updated: 4 Oct 2018 8:00 PM GMT)

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

டாக்கா, 

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த பரபரப்பான அரைஇறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

8 அணிகள் இடையிலான 5-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் டாக்காவில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, வங்காளதேச வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 49.3 ஓவர்களில் 172 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 37 ரன்னும், சமீர் சவுத்ரி 36 ரன்னும், அனுஜ் ரவாத் 35 ரன்னும் எடுத்தனர்.

பின்னர் 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வங்காளதேச அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் சரிந்தன. 6-வது விக்கெட் இணையான ஷமிம் ஹூசைன் (59 ரன்கள்), அக்பர் அலி (45 ரன்கள்) ஆகியோர் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டம் இழந்தனர்.

கடைசி 4 ஓவர்களில் வங்காளதேச அணியின் வெற்றிக்கு 4 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் கடைசி விக்கெட்டாக மின்ஹாஜூர் ரகுமான் (6 ரன்) ரன்-அவுட் ஆனார். முடிவில் வங்காளதேச அணி 46.2 ஓவர்களில் 170 ரன்னில் ஆட்டம் இழந்து. இதனால் இந்திய அணி 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் மொகித் ஜங்ரா, சித்தார்த் தேசாய் தலா 3 விக்கெட்டும், ஹர்ஷ் தியாகி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

டாக்காவில் இன்று நடைபெறும் 2-வது அரைஇறுதியில் இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.

Next Story