‘இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தேர்வு குழுவினர் என்னிடம் பேசவில்லை’ விஜய் குற்றச்சாட்டு


‘இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தேர்வு குழுவினர் என்னிடம் பேசவில்லை’ விஜய் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Oct 2018 8:09 PM GMT (Updated: 4 Oct 2018 8:09 PM GMT)

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

மும்பை,

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பிடித்து இருந்த தொடக்க ஆட்டக்காரர் எம்.விஜய் 2-வது டெஸ்ட் போட்டிக்கு பிறகு மோசமான பார்ம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இங்கிலாந்து தொடரில் இடம் பிடித்தும் வாய்ப்பு அளிக்கப்படாத கருண்நாயரை போல் எம்.விஜய்யும் தேர்வு குழுவினர் மீது குற்றம்சாட்டி இருக்கிறார். இதுதொடர்பாக எம்.விஜய் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பிறகு என்னிடம் தேர்வு குழு தலைவரோ, தேர்வு குழு உறுப்பினர்களோ பேசவில்லை. இங்கிலாந்து பயணத்தில் இடம் பிடித்து இருந்த அணி நிர்வாகிகளிடம் கலந்துரையாடினேன். அணி வீரர்கள் தேர்வுக்கு எந்த மாதிரியான அளவுகோல் கடைப்பிடிக்கப்படுகிறது என்பது புரியாததாக இருக்கிறது என்று ஹர்பஜன்சிங் கூறிய கருத்தை நான் ஒப்புக்கொள்கிறேன். அணியில் இருந்து ஒரு வீரரை நீக்கும் போது அதற்கான காரணத்தை அந்த வீரரிடம் சொல்வது முக்கியமானது என்று நான் கருதுகிறேன். அப்போது தான் அணி நிர்வாகம் என்ன நினைக்கிறது என்பதை புரிந்து அதற்கு தகுந்தபடி செயல்பாட்டை மாற்றி அமைத்து கொண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். தற்போது ஆஸ்திரேலிய தொடருக்காக என்னை தயார்படுத்தி வருகிறேன்’ என்றார்.

Next Story