ராஜ்கோட் டெஸ்ட்: 181 ரன்களுக்குள் சுருண்டு பாலோ ஆன் ஆனது வெஸ்ட் இண்டீஸ்


ராஜ்கோட் டெஸ்ட்:  181 ரன்களுக்குள் சுருண்டு பாலோ ஆன் ஆனது வெஸ்ட் இண்டீஸ்
x
தினத்தந்தி 6 Oct 2018 5:48 AM GMT (Updated: 6 Oct 2018 5:48 AM GMT)

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 181 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது.


ராஜ்கோட்,

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணியில்,  பிரித்வி ஷா (134 ரன்கள்), விராட் கோலி (139 ரன்கள்), ஜடேஜா (100 ரன்கள்) ஆகியோரின் அபார சதத்தால், இந்திய அணி முதல் இன்னிங்சில் 149.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 649 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி எதிர்பார்த்தது போலவே திணறியது. வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் வருவதும் போவதுமாக இருந்தனர். 2-வது நாள் முடிவில் அந்த அணி முதல் இன்னிங்சில் 29 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 94 ரன்களுடன் தவித்துக் கொண்டிருக்கிறது. ஆல்-ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் 27 ரன்களுடனும், கீமோ பால் 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.  இந்த நிலையில், 3-வது நாள் ஆட்டம் இன்றும் துவங்கியதும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் மட்டையை சுழற்ற துவங்கினர். 

இருப்பினும், இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினர். 48 ஓவர்கள் தாக்கு பிடித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53 ரன்கள் சேர்த்தார். இந்திய அணி தரப்பில் பந்து வீச்சில் அதிகபட்சமாக அஷ்வின் 4 விக்கெட்டுகளையும், சமி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.  இதையடுத்து, இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை பால் ஆன் செய்தது. 

இதன்படி, 2-வது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 4.4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 18 ரன்களுடன் விளையாடி வருகிறது. இந்திய அணியை விட வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னும் 450 ரன்கள் பின் தங்கியுள்ளதால், இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றியை பெறும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. 

Next Story