தேர்வு குழுவை விமர்சித்த கிரிக்கெட் வீரர்கள் விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கை?


தேர்வு குழுவை விமர்சித்த கிரிக்கெட் வீரர்கள் விஜய், கருண் நாயர் மீது நடவடிக்கை?
x
தினத்தந்தி 7 Oct 2018 10:45 PM GMT (Updated: 7 Oct 2018 7:46 PM GMT)

தேர்வு குழுவை விமர்சித்த கிரிக்கெட் வீரர்கள் விஜய் மற்றும் கருண் நாயர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை,

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியில் இருந்து நீக்கப்பட்ட கருண் நாயர், முரளிவிஜய் ஆகியோர் தேர்வு குழுவினர் மீது பகிரங்கமாக குற்றம் சாட்டினர். “இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணிக்கு தேர்வாகியும் ஒரு போட்டியில் கூட களம் காண வாய்ப்பு அளிக்கவில்லை. எனக்கு ஏன் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறித்து தேர்வு குழுவினரோ, அணி நிர்வாகமோ என்னிடம் எதுவும் பேசவில்லை” என்று கருண் நாயர் கூறினார். “இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டுக்கு முன்பாக என்னை நீக்கிய பிறகு தேர்வு குழு தலைவரோ, உறுப்பினர்களோ யாரும் பேசவில்லை. வீரர்கள் அணித் தேர்வில் எந்த மாதிரியான அளவுகோல் கடைபிடிக்கப்படுகிறது என்பது புரியாத ஒன்றாக இருக்கிறது” என்று முரளிவிஜய் புகார் கூறினார்.

இந்த நிலையில் தேர்வு குழுவை விமர்சித்த இருவர் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது. இது குறித்து கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், அணித் தேர்வு கொள்கை பற்றி பேசியதன் மூலம் கருண் நாயரும், முரளிவிஜயும் மத்திய ஒப்பந்தத்தை மீறியுள்ளனர். ஒப்பந்த விதிப்படி, ஒரு தொடர் முடிந்து 30 நாட்கள் வரை அது குறித்து சம்பந்தப்பட்ட வீரர்கள் வெளிப்படையாக பேசக்கூடாது. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் வருகிற 11-ந்தேதி ஐதராபாத்தில் நடக்கிறது. அதில் இந்த விவகாரம் எழுப்பப்படும்’ என்றார்.


Next Story