பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்


பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்: தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராட்டம்
x
தினத்தந்தி 10 Oct 2018 10:30 PM GMT (Updated: 10 Oct 2018 10:01 PM GMT)

துபாயில் நடந்து வரும் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் தோல்வியை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடுகிறது.

துபாய்,

பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி துபாயில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 142 ரன்கள் எடுத்து வலுவான தொடக்கம் கண்ட போதிலும் அடுத்த 60 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் தாரைவார்த்து மோசமான சரிவை சந்தித்தது. 202 ரன்களில் சுருண்டு ஆஸ்திரேலியா ‘பாலோ-ஆன்’ ஆனது.

ஆஸ்திரேலியாவுக்கு ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 280 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 45 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி உணவு இடைவேளைக்கு பிறகு 57.5 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக இமாம் உல்-ஹக் 48 ரன்களும், ஆசாத் ஷபிக் 41 ரன்களும், ஹாரிஸ் சோகைல் 39 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 462 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இவ்வளவு பெரிய ஸ்கோரை எந்த அணியும் விரட்டிப்பிடித்ததில்லை.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலியாவின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆரோன் பிஞ்சும், உஸ்மான் கவாஜாவும் முதல் இன்னிங்ஸ் போலவே அருமையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தனர். ஸ்கோர் 87 ரன்களை எட்டிய போது ஆரோன் பிஞ்ச் 49 ரன்களில் வேகப்பந்து வீச்சாளர் முகமது அப்பாசின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஷான் மார்ஷ் (0), அவரது சகோதரர் மிட்செல் மார்ஷ் (0) இருவரும் அப்பாசின் பந்து வீச்சுக்கு இரையானார்கள்.

நேற்றைய ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்சில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்துள்ளது. உஸ்மான் கவாஜா 50 ரன்களுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முகமது அப்பாஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

இந்த டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு இன்னும் 326 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 7 விக்கெட்டுகள் உள்ளன. கடைசி நாளில் இவ்வளவு ரன்கள் எடுப்பது கடினம். அதனால் கடைசி நாளான இன்று ‘டிரா’ செய்யும் முனைப்புடன் ஆஸ்திரேலிய வீரர்கள் போராடுவார்கள். தற்போதைய சூழலில் பாகிஸ்தான் வெற்றி பெறவே அதிக வாய்ப்புள்ளது.


Next Story