வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு


வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய அணி இன்று அறிவிப்பு
x
தினத்தந்தி 10 Oct 2018 10:45 PM GMT (Updated: 10 Oct 2018 10:07 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படுகிறது. இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஐதராபாத்,

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் அந்த அணி இந்தியாவுக்கு எதிராக 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளிலும் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி கவுகாத்தியில் வருகிற 21-ந்தேதி நடக்கிறது.

ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு செய்ய எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான தேர்வு குழுவினர் ஐதராபாத்தில் இன்று கூடி ஆலோசிக்க உள்ளனர். கேப்டன் விராட் கோலியும் தேர்வு குழு கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறார்.

விக்கெட் கீப்பர் டோனியின் ஆட்டத்திறன் சமீபகாலமாக சிறப்பாக இல்லை. கடைசியாக களம் இறங்கிய 18 ஒரு நாள் போட்டிகளில் அவர் ஒரே ஒரு அரைசதம் மட்டுமே அடித்திருக்கிறார். விக்கெட் கீப்பிங் பணியை துல்லியமாக செய்யும் டோனி, தனது அனுபவத்தின் மூலம் அவ்வப்போது கேப்டனுக்கும் பயனுள்ள ஆலோசனைகளை வழங்குகிறார். 37 வயதான டோனி அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்று ஆர்வமாக உள்ளார்.

ஆனால் டோனி பேட்டிங்கில் பார்ம் இன்றி தவிப்பது கவலைக்குரிய அம்சமாக இருக்கிறது. இதனால் அவரை நீக்கி விட்டு, அவருக்கு பதிலாக இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்டுக்கு வாய்ப்பு அளிக்கலாமா? என்பது குறித்து தேர்வு குழுவினர் பரிசீலிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதே சமயம் டோனியை கழற்றி விடாமல், ஒரு பேட்ஸ்மேனாக ரிஷாப் பான்ட் இடம் பெறும் வகையில் ஆலோசனை நடத்தப்படவும் வாய்ப்புள்ளது. 21 வயதான ரிஷாப் பான்ட் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சதம் அடித்தார். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக ராஜ்கோட்டில் நடந்த டெஸ்டில் 92 ரன்கள் விளாசியிருந்தது கவனிக்கத்தக்கது.

கேப்டன் விராட் கோலி அடுத்து வரும் கடினமான ஆஸ்திரேலிய தொடருக்கு தயாராகும் பொருட்டு, அவருக்கு போதுமான ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அதன்படி பார்த்தால் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் அவருக்கு ஓய்வு கொடுப்பது குறித்து தேர்வு குழுவினர் நிச்சயம் யோசிப்பார்கள். கோலிக்கு ஓய்வு அவசியமாக பட்டால், ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பை கவனிப்பார்.

இதற்கிடையே ரன் குவிக்க திணறி வரும் டோனி, உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாட முடிவு செய்துள்ளார். விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் அவரது சொந்த ஊர் அணியான ஜார்கண்ட் அணி கால்இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. இதனால் அவர் கால்இறுதியில் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story