கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்


கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது? - கவுதம் கம்பீர் பதில்
x
தினத்தந்தி 16 Oct 2018 11:30 PM GMT (Updated: 16 Oct 2018 8:02 PM GMT)

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு இந்திய மூத்த வீரர் கம்பீர் பதில் அளித்தார்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் கம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார்.

2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கம்பீரிடம், ஓய்வு பெறுவது எப்போது, அதற்கு முன்பாக கிரிக்கெட்டில் ஏதேனும் இலக்கு வைத்து இருக்கிறீர்களா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து 37 வயதான கம்பீர் கூறியதாவது:-

குறிப்பிட்ட இலக்கு என்பது எல்லாம் இல்லை. இப்போது வரைக்கும் தொடர்ந்து ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடனே விளையாடுகிறேன். அது தான் என்னை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது. ரன்கள் குவிப்பது, வெற்றி பெற வைப்பது, வீரர்கள் ஓய்வறையில் மகிழ்ச்சியாக இருப்பது இவை தான் என்னை உற்சாகப்படுத்தும்.

இந்த நாள் வரைக்கும் எனக்குள் கிரிக்கெட் உணர்வு முழுமையாக பரவி இருக்கிறது. எப்போதும் ஓய்வறையில் சந்தோஷமான சூழலில் இருக்க விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்கிறேன். தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணம் இல்லை. கிரிக்கெட் விளையாட்டு மீதான ஆர்வமும், ஆக்ரோஷமும் எப்போது குறைகிறதோ? அப்போது விடைபெறுவேன்.

உங்களது பயணத்தில் ஏதேனும் வெற்றிடம் இருக்கிறதா? என்று கேட்கிறீர்கள். கிரிக்கெட்டை பொறுத்தவரை எப்போதும் நீங்கள் ஏதாவது ஒரு வெற்றிடத்தை நிரப்பிக் கொண்டு இருக்கலாம். அதற்கு முடிவே கிடையாது. விரும்பிய இலக்கை அடைந்து விட்டேன் என்று உணரும் போது கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்திக் கொள்வேன்.

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி முன்பை விட இப்போது மிக கடினமாகவும், சவால் நிறைந்ததாகவும் இருக்கின்றன. நிறைய புதிய வீரர்கள் வருகிறார்கள். அதனால் சவால்களும் வித்தியாசப்படுகின்றன. அணிகளின் உரிமையாளர்களும் வீரர்களை தேர்வு செய்வது உள்ளிட்ட விஷயங்களில் புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள். எந்த ஒரு விளையாட்டு வீரர்களுக்கும் இதுபோன்ற சவால்கள் தான் தேவையாகும். அந்த சவால்களோடு பயணிக்கும் போது நமது ஆட்டத்தை மேம்படுத்திக்கொள்ள முடியும் என்று கம்பீர் கூறினார்.


Next Story