விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தி மும்பை அணி ‘சாம்பியன்’
x
தினத்தந்தி 20 Oct 2018 10:30 PM GMT (Updated: 20 Oct 2018 9:23 PM GMT)

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் மோதின. இதில் மும்பை அணி சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது.

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் மும்பை-டெல்லி அணிகள் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 45.4 ஓவர்களில் 177 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக ஹிமத் சிங் 41 ரன்கள் எடுத்தார். கேப்டன் கவுதம் கம்பீர் (1 ரன்) ஏமாற்றம் அளித்தார். மும்பை தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் தவால் குல்கர்னி, ஷிவம் துபே தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

அடுத்து களம் இறங்கிய மும்பை அணியில் பிரித்வி ஷா (8 ரன்), ரஹானே (10 ரன்), சூர்யகுமார் யாதவ் (4 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (7 ரன்) ஆகியோர் 40 ரன்னுக்குள் நடையை கட்டினர். இதனால் தடுமாறிய மும்பை அணியை சித்தேஷ் லாட்டும் (48 ரன், 4 பவுண்டரி, 2 சிக்சர்), விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரேவும் (71 ரன், 13 பவுண்டரி, ஒரு சிக்சர்) இணைந்து காப்பாற்றினர். அந்த அணி 35 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 180 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடி, சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது. இந்த தொடரில் மும்பை அணி தோல்வியே சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோப்பையை மும்பை அணி வெல்வது 3-வது முறையாகும். ஏற்கனவே 2003-04, 2006-07-ம் ஆண்டுகளிலும் வென்று இருந்தது.

Next Story