10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டி ‘‘சாதனை படைப்பேன் என்று நினைத்ததில்லை’’ விராட் கோலி பேட்டி


10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டி ‘‘சாதனை படைப்பேன் என்று நினைத்ததில்லை’’ விராட் கோலி பேட்டி
x
தினத்தந்தி 26 Oct 2018 9:45 PM GMT (Updated: 26 Oct 2018 9:10 PM GMT)

ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

ஒரு நாள் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை வேகமாக எட்டுவேன் என்று நினைத்து பார்த்ததில்லை என்று இந்திய கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.

கோலி பேட்டி

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி சில தினங்களுக்கு முன்பு, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்து புதிய உலக சாதனை படைத்தார். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரை விட 54 இன்னிங்சுக்கு முன்னதாகவே இந்த மைல்கல்லை கடந்த 29 வயதான விராட் கோலி இணையதளத்துக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:–

எனது நாட்டுக்காக விளையாடுவது மிகப்பெரிய கவுரவமாகும். 10 ஆண்டுகளாக தேசத்திற்காக விளையாடிய பிறகும் கூட இங்கு எதையும் நான் உரிமை கொண்டாட விரும்பவில்லை. கிரிக்கெட்டில் எதுவும் சுலபமல்ல. கடும் போட்டி நிலவும் சர்வதேச போட்டியில் இன்னும் ஒவ்வொரு ரன்னுக்காகவும் கடினமாக உழைக்க வேண்டி உள்ளது.

எப்போதும் கடமை உணர்வுடன் செயல்பட வேண்டும். ஒரு ஓவரில் 6 பந்திலும் ‘டைவ்’ அடிக்க வேண்டும் என்றால், அணிக்காக அதையும் செய்வேன். இது எனது கடமை. அதற்காகத் தான் நான் அணிக்கு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறேன். இது எனது பணியின் ஒரு அங்கம். அணிக்கு என்ன தேவையோ அதற்கு தகுந்தபடி உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் என்னை தயார்படுத்திக் கொண்டு செயல்படுவதால், என்னால் மற்றவர்களை காட்டிலும் அதிக ரன்கள் குவிக்க முடிகிறது என்று நினைக்கிறேன். சூழ்நிலைக்கு தகுந்தபடி பேட்டிங்கில் அணிக்கு பங்களிப்பு அளித்து வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

10 ஆயிரம் ரன்கள்

சாதனை எனக்கு பெரிதல்ல, நான் நேசிக்கும் ஒரு விளையாட்டில் 10 ஆண்டுகள் ஆடுவது எனக்கு சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இதே போல் தொடர்ந்து விளையாட வேண்டும். அது தான் எனக்கு முக்கியம். இவ்வளவு காலம் ஆடியது உற்சாகம் தருகிறது. மேலும் பல ஆண்டுகள் விளையாட முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இப்படியொரு சாதனையை நிகழ்த்துவேன் அல்லது கிரிக்கெட்டில் உயர்ந்த நிலையை எட்டுவேன் என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை. இந்திய அணிக்காக ஆட வேண்டும் என்பது மட்டுமே கனவாக இருந்தது. இது போன்ற தருணங்கள் எனது வாழ்வில் வரும் என்று கற்பனை கூட செய்ததில்லை. 10 ஆயிரம் ரன்களை துரிதமாக எட்டியதன் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன். இதற்காக கடவுளுக்கு நன்றிகடன் பட்டுள்ளேன்.

இவ்வாறு கோலி கூறினார்.


Next Story