நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி, தொடரையும் கைப்பற்றியது


நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட்: பாகிஸ்தான் அணி அபார வெற்றி, தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 3 Nov 2018 11:00 PM GMT (Updated: 3 Nov 2018 7:30 PM GMT)

நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

துபாய்,

பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக காலின் முன்ரோ, கோரி ஆண்டர்சன் தலா 44 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து களம் இறங்கிய பாகிஸ்தான் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பாபர் அசாம் 40 ரன்களும், ஆசிப் அலி 38 ரன்களும், முகமது ஹபீஸ் ஆட்டம் இழக்காமல் 34 ரன்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் வசப்படுத்தியது. அபுதாபியில் நடந்த முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 2 ரன் வித்தியாசத்தில் வெற்றி கண்டு இருந்தது. 20 ஓவர் போட்டித் தொடரை பாகிஸ்தான் அணி தொடர்ச்சியாக 11-வது முறையாக வென்றுள்ளது. அத்துடன் 20 ஓவர் போட்டியில் 11 ஆட்டங்களில் தொடர்ச்சியாக இலக்கை வெற்றிகரமாக விரட்டிப்பிடித்து (சேசிங்) பாகிஸ்தான் சாதனை படைத்துள்ளது.

இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி இ.எஸ்.பி.என். சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story