உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?


உலக கோப்பை தொடருக்காக ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டம்?
x
தினத்தந்தி 9 Nov 2018 6:53 AM GMT (Updated: 9 Nov 2018 6:53 AM GMT)

உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கும் வகையில் ஐபிஎல் தொடரை முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மும்பை,

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2019 மே 30 முதல் ஜூலை 14-ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெறுகிறது. 12-ஆவது ஐபிஎல் போட்டிகள் மார்ச் 29-இல் தொடங்கி மே 19-இல் முடிந்தவுடன் 10 நாள்களில் உலகக் கோப்பை போட்டிகள் தொடங்குகின்றன. இந்த தொடரில், இந்திய அணி தனது முதல் போட்டியாக ஜூன் 6 ஆம் தேதி  தென் ஆப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.  

உலக கோப்பை தொடருக்கு முன், இந்திய வீரர்களுக்கு போதுமான ஓய்வு தேவை என்று இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி உட்பட இந்திய அணியின் நிர்வாகிகள், பிசிசிஐ நிர்வாக குழுவிடம் கோரிக்கை முன்வைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஐதராபாத்தில் கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தின் போது, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு குறிப்பாக பும்ரா, புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்று விராட் கோலி நிர்வாக குழுவிடம் தெரிவித்து உள்ளார்.  மேலும் ஐபிஎல் போட்டிகளை தவற விடும் வீரர்களுக்கு பிசிசிஐ இழப்பீடு வழங்கலாம் எனவும் ஆலோசனை தரப்பட்டுள்ளது.

ஆனால், இந்த முடிவுக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக உள்ள ரோகித் சர்மா இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது. கோலியின் இந்த கோரிக்கையால், மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக பாதிக்கப்படும். அந்த அணி பும்ரா, ஹார்திக் பாண்டியா ஆகியோரை இழக்க நேரிடும்.இப்பிரச்னை தொடர்பாக சிஓஏ, ஐபிஎல் முதன்மை இயக்க மேலாளர் ஹேமங் அமினிடம் விவாதித்தனர். இதுகுறித்து முடிவெடுப்பதற்கு முன்பு அணிகளின் நிர்வாகங்களிடம் பேச வேண்டும். குறைந்தது வரும் நவம்பர் 15-ஆம் தேதி வீரர்கள் வாங்குதல், பரிமாற்றம் செய்வதற்கு கடைசி நாளுக்கு முன்பு ஆலோசிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

மேலும் இங்கிலாந்து, ஆஸிதிரேலியா அணி கிரிக்கெட் வீரர்கள் வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் ஆடுவர். உலகக் கோப்பைக்கு தயாராக ஏதுவாக அவர்களது கிரிக்கெட் வாரியங்கள் மீண்டும் அவர்களை அழைத்துக் கொள்ளும் எனத் தெரிகிறது. எனவே, 2019- ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரை முன்கூட்டியே நடத்துவது குறித்தும் ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 23 ஆம் தேதியே நடத்த திட்டம் உள்ளதாக ஈஎஸ்பிஎன் கிரிக் இன்போ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. 

Next Story