நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து


நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து
x
தினத்தந்தி 12 Nov 2018 10:00 PM GMT (Updated: 12 Nov 2018 8:53 PM GMT)

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான கடைசி ஒருநாள் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

துபாய்,

நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி துபாயில் நேற்று முன்தினம் நடந்ததது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 279 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக பாபர் அசாம் 92 ரன்னும், பஹர் ஜமான் 65 ரன்னும், ஹாரிஸ் சோகைல் 60 ரன்னும் எடுத்தனர்.

2-வது ஆட்டத்தின் போது ‘பவுன்சர்’ பந்து தாக்கியதில் காயம் அடைந்த பாகிஸ்தான் தொடக்க ஆட்டக்காரர் இமாம் உல்-ஹக் இந்த ஆட்டத்தில் விளையாடவில்லை. நியூசிலாந்து அணி தரப்பில் பெர்குசன் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். பின்னர் 280 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்து அணி 6.5 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 35 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.

தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் (சமனில்) முடிந்தது. முதலாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 47 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று இருந்தது. முன்னதாக 20 ஓவர் போட்டி தொடரை பாகிஸ்தான் அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இதைத்தொடர்ந்து இரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் வருகிற 16-ந் தேதி தொடங்குகிறது. பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.


Next Story