பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி


பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி
x
தினத்தந்தி 13 Nov 2018 10:30 PM GMT (Updated: 13 Nov 2018 8:21 PM GMT)

பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் வெற்றி பெற்றன.

செயின்ட் லூசியா,

பெண்களுக்கான 6-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதி வருகின்றன.

‘ஏ’ பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தென்ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 99 ரன்களே எடுத்தது. தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஷப்னிம் இஸ்மாயில் 4 ஓவர்களில் 10 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அடுத்து களம் கண்ட தென்ஆப்பிரிக்க அணி 18.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மரிஜானே காப் 38 ரன்களும், கேப்டன் டானி வான் நிகெர்க் 33 ரன்களும் எடுத்தனர்.

‘ஏ’ பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து அணி, வங்காளதேசத்தை சந்தித்தது. முதலில் ஆடிய வங்காளதேச அணி, இங்கிலாந்து பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 76 ரன்களுக்கு அடங்கியது.

இதைத்தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 9 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 55 ரன்கள் எடுத்து இருந்த போது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 16 ஓவர்களில் 64 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை இங்கிலாந்து அணி 9.3 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமை ஜோன்ஸ் 28 ரன்னும், கேப்டன் ஹீதர் நைட் 11 ரன்னும் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தனர். 2-வது ஆட்டத்தில் விளையாடிய இங்கிலாந்து அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். இலங்கைக்கு எதிரான இங்கிலாந்து அணியின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.


Next Story