பாலியல் புகாரில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி விடுவிப்பு


பாலியல் புகாரில் இருந்து இந்திய கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி விடுவிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2018 10:00 PM GMT (Updated: 21 Nov 2018 9:51 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார்.

புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியிருந்தார். பெயரை வெளியிட விரும்பாத அவர் டெலிவி‌ஷன் நிறுவனத்தில் முன்பு ராகுல்ஜோரி அதிகாரியாக இருந்த போது அங்கு பணியாற்றிய தன்னிடம் அவர் எல்லை மீறி நடக்க முயற்சித்தார் என்று டுவிட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். ஆனால் பின்னர் அவர் அந்த பதிவை நீக்கி விட்டார். இருப்பினும் இந்த புகார் பிரச்சினையாக விசுவரூபம் எடுத்தது. இதைத்தொடர்ந்து ராகுல் ஜோரியை பதவியில் இருந்து ஒதுங்கி இருக்க உத்தரவிட்ட இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி, அவர் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த 3 பேர் கொண்ட கமிட்டியை கடந்த மாதம் 25–ந் தேதி நியமித்தது. இந்த கமிட்டி ராகுல் ஜோரி மீதான புகார் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தனது அறிக்கையை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் தாக்கல் செய்துள்ளது. அந்த விசாரணை அறிக்கையில், ‘ராகுல் ஜோரி மீதான பாலியல் புகார் உண்மைக்கு புறம்பானது. அதற்கு ஆதாரம் எதுவும் இல்லை. இது ஜோடிக்கப்பட்ட குற்றச்சாட்டாகும். ராகுல் ஜோரிக்கு தீங்கு விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட நோக்கத்துடன் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில் விசாரணை கமிட்டியில் இடம் பெற்றுள்ள ஒரு உறுப்பினர் ராகுல் ஜோரிக்கு பாலின உணர்திறன் ஆலோசனை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்துள்ளார். இந்த பரிந்துரையால் இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. நிர்வாக கமிட்டி தலைவர் வினோத் ராய், ராகுல் ஜோரி தனது பணியை மீண்டும் தொடரலாம் என்று தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாலின உணர்திறன் ஆலோசனை பெற வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதால் ராகுல் ஜோரி பதவி விலக வேண்டும் என்று அவர் வற்புறுத்தி உள்ளார்.


Next Story