ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் மிதாலி ராஜ் மேலாளர் தாக்கு


ஹர்மன்பிரீத் கவுர் கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர் மிதாலி ராஜ் மேலாளர் தாக்கு
x
தினத்தந்தி 24 Nov 2018 9:30 PM GMT (Updated: 24 Nov 2018 8:13 PM GMT)

இந்திய அணியின் சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது.

புதுடெல்லி, 

வெஸ்ட்இண்டீசில் நடந்து வரும் 6–வது பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெளியேறியது. காயம் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆடாத இந்திய அணியின் சீனியர் வீராங்கனை மிதாலி ராஜ் உடல் தகுதியுடன் இருந்தும் அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கப்படாதது விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கு இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பதிலளிக்கையில், ‘ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் நாங்கள் மிக சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றோம். அதனால் தான் அந்த வெற்றி கூட்டணியை மாற்றாமல் அரைஇறுதியில் விளையாட முடிவு செய்தோம். எனவே மிதாலி ராஜிக்கு இடம் கிடைக்காமல் போனது. எந்த முடிவு எடுத்தாலும் அணியின் நலனுக்காகவே நாங்கள் எடுக்கிறோம்’ என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிலையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மீது, மிதாலி ராஜின் மேலாளர் அனிஷா குப்தா டுவிட்டரில் கடுமையான தாக்குதல் தொடுத்துள்ளார். அவர் தனது பதிவில், ‘ஹர்மன்பிரீத் கவுர் சூழ்ச்சிகாரர், பொய்யர், முதிர்ச்சியற்றவர், ஏமாற்றுக்காரர், கேப்டன் பதவிக்கு தகுதியற்றவர். துரதிருஷ்டவசமாக இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகம் விளையாட்டை விடவும் அரசியலை நம்புகிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் சில மணி நேரங்களில் அந்த பதிவு நீக்கம் செய்யப்பட்டது. ‘அந்த பதிவு தன்னுடையது தான். மிதாலி ராஜ் மோசமாக நடத்தப்பட்டதால் இவ்வாறு பதிவிட்டேன்’ என்று அனிஷா குப்தா தெரிவித்துள்ளார்.


Next Story