இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இலங்கை 240 ரன்னில் ஆல்–அவுட்
x
தினத்தந்தி 24 Nov 2018 9:45 PM GMT (Updated: 24 Nov 2018 8:17 PM GMT)

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது.

கொழும்பு, 

இலங்கை – இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து தொடக்க நாளில் 7 விக்கெட்டுக்கு 312 ரன்கள் எடுத்திருந்தது. 2–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 336 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இலங்கை தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் சன்டகன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியில் குணதிலகா 18 ரன்னில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் 2–வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவும், தனஞ்ஜெயா டி சில்வாவும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். இவர்களுக்கு அதிர்ஷ்டமும் துணை நின்றது. கருணாரத்னே 2 ரன்னிலும், டி சில்வா 42 ரன்னிலும் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பி பிழைத்தனர். இரண்டு முறையும் ஸ்லிப்பில் நின்ற இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ‘கேட்ச்’ வாய்ப்புகளை வீணடித்தார்.

ஒரு கட்டத்தில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 173 ரன்களுடன் மிக வலுவாக இருந்தது. இந்த ஜோடி பிரிந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழாக மாறியது. டி சில்வா 73 ரன்னிலும், கருணாரத்னே 83 ரன்னிலும் வெளியேறினார்கள். அதன் பிறகு விக்கெட்டுகள் கொத்துக் கொத்தாக சரிந்தன. அந்த அணி முதல் இன்னிங்சில் 65.5 ஓவர்களில் 240 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் 5 விக்கெட்டுகளும், வேகப்பந்து வீச்சாளர் பென் ஸ்டோக்ஸ் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். பின்னர் 96 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து நேற்றைய ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 3 ரன் எடுத்துள்ளது. 3–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.


Next Story