‘பயிற்சியாளர் ரமேஷ் பவாரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன்’ - இந்திய வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பு புகார்


‘பயிற்சியாளர் ரமேஷ் பவாரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன்’ - இந்திய வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பு புகார்
x
தினத்தந்தி 27 Nov 2018 7:38 PM GMT (Updated: 27 Nov 2018 11:40 PM GMT)

பயிற்சியாளர் ரமேஷ் பவாரால் பலமுறை அவமதிக்கப்பட்டேன் என இந்திய வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது பயிற்சியாளர் ரமேஷ் பவரால் பலமுறை அவமதிக்கப்பட்டதாக இந்திய வீராங்கனை மிதாலிராஜ் திடுக்கிடும் புகார்களை கூறியுள்ளார்.

சமீபத்தில் வெஸ்ட் இண்டீசில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அரைஇறுதியுடன் வெளியேறியது. இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதியில் இந்திய அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது.

லீக் சுற்றில் இரண்டு அரைசதங்கள் அடித்த இந்திய மூத்த வீராங்கனை மிதாலிராஜ், முக்கியமான அரைஇறுதியில் சேர்க்கப்படவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியது. ‘ஆடும் லெவன் அணியை தேர்வு செய்வது குறித்து அணி நிர்வாகம் (கேப்டன், துணை கேப்டன், பயிற்சியாளர், தேர்வாளர்) எடுக்கும் முடிவில் நாங்கள் தலையிட முடியாது. விளையாட்டில் இது போன்று நடப்பது சகஜம்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி கூறியிருந்தார்.

இந்த நிலையில் 20 ஓவர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீராங்கனை என்ற பெருமைக்குரிய 35 வயதான மிதாலிராஜ், தனது தரப்பு விளக்கத்தை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி மற்றும் பொது மேலாளர் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) சபாகரிம் ஆகியோருக்கு இ-மெயில் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். அதில் மிதாலிராஜ் கூறியிருப்பதாவது:-

எனது 20 ஆண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையில் இப்படியொரு வேதனையையும், அவமானங்களையும் இதற்கு முன்பு சந்தித்ததில்லை. தேசத்திற்காக நான் ஆற்றும் சேவையையும், எனது புகழ் மற்றும் நம்பிக்கையையும் அதிகாரத்தில் உள்ள சிலர் சீர்குலைக்க முயற்சிக்கிறார்களோ? என்று நினைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன்.

இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக கமிட்டி உறுப்பினர் டயானா எடுல்ஜி மற்றும் அவர் வகிக்கும் பொறுப்பு மீது எனக்கு எப்போதும் மிகுந்த மதிப்பு உண்டு. அவர் எனக்கு எதிராக தனது பதவியை பயன்படுத்துவார் என்று ஒரு போதும் நினைத்ததில்லை. அரைஇறுதி போட்டியில் என்னை வெளியே உட்கார வைத்த முடிவுக்கு அவர் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது வேதனை அளிக்கிறது. இத்தனைக்கும் நடந்த சம்பவம் குறித்து அவரிடம் நான் முன்பே பேசி இருக்கிறேன். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்ற எல்லா உண்மையும் அவருக்கு தெரியும்.

கிரிக்கெட் வாரியத்தின் நடைமுறைகளை நான் சரியாக கடைபிடிப்பவள். அதனால் தான் வெஸ்ட் இண்டீசில் இருந்த போது இந்த விஷயம் பற்றி ஊடகத்தினரிடம் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. எனது விவகாரத்தை கிரிக்கெட் வாரியம் நியாயமாக கையாளும் என்று நம்பினேன். ஆனால் அணியில் இருந்து ஓரங்கட்டிய முடிவுக்கு கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாக கமிட்டி உறுப்பினர் ஆதரவு தெரிவித்ததன் மூலம் அவர் ஒருதலைபட்சமாக நடந்து கொள்வதும், எனக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டிருப்பதும் தெளிவாக தெரிகிறது.

எல்லா சர்ச்சைகளுக்கும், குழப்பங்களுக்கும் தலைமை பயிற்சியாளர் ரமேஷ் பவார் தான் காரணம். வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் காலடி எடுத்து வைத்ததுமே பிரச்சினைகளும் உருவெடுத்து விட்டன. அவரது நடத்தைகள் எனக்கு எதிராகவே அமைந்தன. என் மீது பாகுபாடு காட்ட ஆரம்பித்தார்.

உலக கோப்பை போட்டிக்கு முந்தைய தொடர்களிலும், உலக கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்களிலும் நான் தொடக்க ஆட்டக்காரராக இறங்கி விளையாடினேன். ஆனால் உலக கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான தொடக்க லீக் ஆட்டத்திற்கு முந்தைய நாள், ‘பேட்டிங்கில் நடுவரிசையை வலுப்படுத்த வேண்டி உள்ளது. அதனால் நீ பின்வரிசையில் இறங்க வேண்டும்’ என்று பயிற்சியாளர் ரமேஷ் பவார் என்னிடம் கூறினார். அணியின் நலன் கருதி நானும் ஏற்றுக்கொண்டேன். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க ஜோடி சொதப்பியது. பவர்பிளேயில் 3 விக்கெட்டுகளை இழந்து 38 ரன்களை மட்டுமே எடுத்தோம்.

ஆனாலும் தொடக்க ஜோடியை வெகுவாக பாராட்டியதோடு, அடுத்த ஆட்டத்திலும் (பாகிஸ்தானுக்கு எதிராக) அதே ஜோடியே தொடக்க வீராங்கனைகளாக விளையாடுவார்கள் என்று சொன்னார். இதை கேட்டு நான் அதிர்ச்சிக்குள்ளானேன். பாகிஸ்தானுக்கு எதிராக மிடில்வரிசையை பலப்படுத்த வேண்டிய தேவை இல்லை. அத்துடன் அந்த அணிக்கு எதிராக நான் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தது உண்டு. அதனால் இது பற்றி தேர்வாளர்களிடம் பேசினேன். அவர்களது தலையீட்டின் பேரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்க வீராங்கனையாக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதில் அரைசதம் அடித்து வெற்றிக்கு வித்திட்டு ஆட்டநாயகியாக தேர்வானேன். ஆனால் ரமேஷ் பவார் என்னை ஊக்கப்படுத்தி ஒரு வார்த்தை கூட பாராட்டவில்லை. அதன் பிறகு அவரது நடவடிக்கை எனக்கு எதிராக முற்றிலும் திரும்பியது.

உதாரணமாக வலை பயிற்சிக்கு அவர் வரும் போது நான் பேச முயற்சித்தால், உடனே அவர் செல்போனை பார்ப்பது போல் அங்கிருந்து சென்று விடுவார். நான் அருகில் உட்கார்ந்து இருந்தாலும் என்னை உதாசீனப்படுத்தும் வகையில், மற்றவர்களின் பயிற்சியை மட்டும் கவனிப்பது போல் செயல்படுவார். இத்தகைய அவமதிப்புகளால் மனம் காயப்பட்டது. இது போன்ற பிரச்சினைகளால் அணியின் முன்னேற்றத்துக்கு பாதிப்பு வந்து விடக்கூடாது என்று கருதி அணியின் மேலாளரிடம் எனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்தேன். மேலாளர், அணி வீராங்கனைகளின் கூட்டத்தின் போது இது பற்றி பேசினார். அப்போது ரமேஷ் பவார் சில விஷயங்களில் தவறு செய்ததை ஒப்புக் கொண்டார். நானும், அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இளம் வீராங்கனைகளை தொடக்க ஜோடியாக அனுப்பினால் தான் சரியாக இருக்கும் என்று நினைத்தால், அப்படியே செய்யுங்கள் என்று கூறினேன். இத்துடன் எங்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடுகள் முடிவுக்கு வந்து விட்டதாக நம்பினேன். ஆனால் அதன் பிறகு அவரது நடவடிக்கை மேலும் மோசமானது.

இந்த சூழலில் அயர்லாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கடினமான ஆடுகளத்தில் களம் கண்டு அரைசதம் விளாசி மறுபடியும் ஆட்டநாயகி விருதை பெற்றேன். துரதிர்ஷ்டவசமாக பீல்டிங்கின் போது கால் முட்டியில் காயம் ஏற்பட்டது. காய்ச்சலும் வந்து விட்டது. உடல்நிலை சரியாக சில நாட்கள் ஓய்வு தேவை என்று அணியின் உடல்தகுதி நிபுணர் அறிவுறுத்தினார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் ஆட முடியாமல் போனது.

அரைஇறுதி சுற்றை எட்டிய பிறகு 3 நாட்கள் இடைவெளி இருந்தது. முதல் நாளில் யாரும் வலை பயிற்சியில் ஈடுபடவில்லை. பீல்டிங் பயிற்சி மட்டுமே நடந்தது. ஆனால் ரமேஷ் பவார் 5 வீராங்கனைகளுக்கு மட்டும் கூடுதல் பயிற்சி அளித்தார். இதை கேள்விப்பட்டு நான், ‘இரண்டு நாட்களாக பேட்டிங் பயிற்சி எதுவும் செய்யவில்லை. அதனால் நானும் கூடுதல் பயிற்சியில் இணைகிறேன்’ என்று பவாருக்கு செல்போனில் தகவல் அனுப்பினேன். அதற்கு அவரிடம் இருந்து பதில் இல்லை. மறுநாள் அவர் பின்வரிசையில் உள்ள வீராங்கனைகளுடன் சேர்த்து என்னை பேட்டிங் பயிற்சி செய்ய வைத்தார். இதில் இருந்தே அரைஇறுதியில் நான் விளையாடுவதில் அவருக்கு விருப்பம் இல்லை என்பதை புரிந்து கொண்டேன்.

கடைசி நேரத்தில்தான் அணியில் இடமில்லை என்பது தெரிந்தது. ஏமாற்றத்தில் அழுகையை அடக்க முடியவில்லை. இவ்வாறு மிதாலி ராஜ் அதில் கூறியுள்ளார்.


Next Story