மிதாலிராஜ் நீக்கப்பட்டது ஏன்? - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம்


மிதாலிராஜ் நீக்கப்பட்டது ஏன்? - இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம்
x
தினத்தந்தி 28 Nov 2018 10:45 PM GMT (Updated: 29 Nov 2018 12:08 AM GMT)

மிதாலிராஜ் நீக்கப்பட்டது ஏன் என, இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் ரமேஷ் பவார் விளக்கம் அளித்தார்.

மும்பை,

வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் போது இந்திய பயிற்சியாளர் ரமேஷ் பவார் தன்னை பலமுறை அவமதித்து உதாசீனப்படுத்தியதாகவும், இதனால் மனம் உடைந்து கண்ணீர் சிந்தியதாகவும் மூத்த வீராங்கனை மிதாலிராஜ் பரபரப்பான புகார்களை தெரிவித்தார். இங்கிலாந்துக்கு எதிரான அரைஇறுதி ஆட்டத்தில் தன்னை வேண்டுமென்றே அவர் நீக்கியதாகவும் கூறினார். இதனால் சிக்கலுக்குள்ளான பயிற்சியாளர் ரமேஷ் பவார் மும்பையில் நேற்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரிம் (கிரிக்கெட் ஆபரேட்டிங்) ஆகியோரை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது தொழில்முறை ரீதியாக எங்களுக்கு இடையே நெருக்கமான உறவு இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். மிதாலிராஜ் எப்போதும் மற்றவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருந்ததால் அவரை கையாளுவது கடினமாக இருந்தது என்றும் பவார் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளிடம் தெரிவித்தார். அவரது சந்திப்பு குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்ற அணியை மாற்றமின்றி அப்படியே இறக்க வேண்டும் என்று முடிவு மேற்கொண்டோம். மேலும் அதிரடியாக ஆடுவதில் மிதாலியின் ‘ஸ்டிரைக்ரேட்’ மோசமாக இருந்தது. இதன் காரணமாகவே அவரை அரைஇறுதி ஆட்டத்தில் சேர்க்கவில்லை. மற்றபடி அவர் மீது எந்த வித பாகுபாடும் காட்டவில்லை என்று பவார் கூறியுள்ளார்.

மிதாலியை நீக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் யாரும் நெருக்கடி கொடுத்தார்களா? என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் இல்லை என்று பதில் அளித்தார். அதே சமயம் கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரமிக்க பதவியில் உள்ள ஒரு நபர், அணியின் மேலாளர் (திருப்தி பட்டாச்சார்யா) மற்றும் தேர்வாளர் (சுதா ஷா) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என்றும் கூறினார். இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.


Next Story