பவாரின் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?


பவாரின் ஒப்பந்தம் நீட்டிப்பு இல்லை: இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?
x
தினத்தந்தி 30 Nov 2018 10:30 PM GMT (Updated: 30 Nov 2018 10:22 PM GMT)

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார் என கேள்வி எழுந்துள்ளது.

புதுடெல்லி,

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் இடைக்கால பயிற்சியாளராக இருந்த ரமேஷ் பவார் சர்ச்சையில் சிக்கினார். பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டின் அரைஇறுதியில் மூத்த வீராங்கனை மிதாலிராஜியை நீக்கியதால் விமர்சனத்துக்குள்ளானார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தனது புகழை அழிக்க முயற்சிப்பதாக பவார் மீது மிதாலி குற்றம் சாட்டினார். பேட்டிங் வரிசையை மாற்றினால் கிரிக்கெட்டுக்கு முழுக்கு போடுவேன் என்று மிதாலி மிரட்டியதாக பவார் பதிலடி கொடுத்தார்.

இந்த விவகாரத்தால் கடும் அதிருப்திக்குள்ளான இந்திய கிரிக்கெட் வாரியம் பவாரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க விரும்பவில்லை. நேற்றுடன் அவரது ஒப்பந்த காலம் முடிவடைந்தது.

இந்த நிலையில் பெண்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விருப்பம் உள்ளவர்கள் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்த தகுதிக்குட்பட்டு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் அழைப்பு விடுத்துள்ளது. முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, டேவ் வாட்மோர், இந்தியாவின் வெங்கடேஷ் பிரசாத் உள்ளிட்டோர் பயிற்சியாளர் பதவிக்கு ஆர்வம் காட்டுவதாக தெரிய வந்துள்ளது. விண்ணப்பித்தவர்களிடம் வருகிற 20-ந்தேதி மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் நேர்காணல் நடத்தப்படும். புதிய பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவர் 2 ஆண்டுக்கு பணியில் தொடருவார்.


Next Story