ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார்


ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி இந்த முறை வெல்லாவிட்டால் எப்போதும் முடியாது - டீன் ஜோன்ஸ் சொல்கிறார்
x
தினத்தந்தி 30 Nov 2018 11:30 PM GMT (Updated: 30 Nov 2018 10:45 PM GMT)

தற்போதைய ஆஸ்திரேலிய பயணத்தில் டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல முடியாமல் போனால் அதன் பிறகு எப்போதுமே முடியாது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

சிட்னி,

ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 6-ந்தேதி அடிலெய்டில் தொடங்குகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் இதற்கு முன்பு 11 முறை டெஸ்ட் தொடரில் ஆடியுள்ள இந்திய அணி ஒரு தொடரை கூட சொந்தமாக்கியதில்லை. இதனால் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில் இந்த தொடர் எப்படி இருக்கும் என்பது குறித்து 52 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவரான ஆஸ்திரேலிய முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

முன்னணி வீரர்கள் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோர் இல்லாததால் ஆஸ்திரேலிய அணி பலவீனமாகி இருக்கிறது. இதை சாதகமாக பயன்படுத்தி டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்ல பிரகாசமான வாய்ப்பு உள்ளது. அதே சமயம் இந்த முறை தொடரை வசப்படுத்தாவிட்டால், அதன் பிறகு ஒரு போதும் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணியால் வெல்ல முடியாது. தற்போதைய இந்திய அணி ஆஸ்திரேலியாவை காட்டிலும் மூன்று வடிவிலான போட்டியிலும் சிறப்பான நிலையில் உள்ளது. ஆனால் வீரர்கள் நம்பிக்கையுடன் செயல்பட வேண்டும்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-0 அல்லது 3-0 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று நினைக்கிறேன். அதே சமயம் ஆஸ்திரேலியா எந்த ஒரு டெஸ்டிலும் வெற்றி பெறும் என்று எனக்கு தோன்றவில்லை.

பொதுவாக ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது மிகவும் கடினம். ஆனால் தற்போது ஸ்டீவன் சுமித், வார்னர் இல்லாமல் களம் இறங்குகிறது. களத்தில் நிலைத்து நின்று ஆடக்கூடிய இவர்கள் ஆஸ்திரேலிய அணியின் 40 சதவீத ரன்களை சேர்த்து விடும் திறமைசாலிகள். தொடர்ச்சியாக பெரும் பங்களிப்பை அளித்து வந்தனர். அவர்களை போன்று ஆடுவதற்கு யார் இருக்கிறார்கள்?

இந்திய கேப்டன் விராட் கோலியை வார்த்தைகளால் சீண்டுவதையோ அல்லது கோபமூட்டும் வகையில் நடந்து கொள்வதையோ ஆஸ்திரேலிய வீரர்கள் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் அது அவரை மேலும் சிறப்பாக செயல்பட வைத்து விடும். அதற்கு பதிலாக அவருடன் இணக்கமான சூழலை உருவாக்கிக் கொள்ளுங்கள். பேட்டிங்கில் எந்த பகுதியில் கோலி பலவீனமாக இருக்கிறார் என்பதை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். கோலி எப்போதும் ‘கவர்’ திசையில் நேர்த்தியாக ஆடக்கூடியவர். அதனால் அவருக்கு வேறு திசையில் பந்து வீசி நெருக்கடி கொடுக்கலாம்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும். 1986-ம் ஆண்டு இந்தியாவுக்கு சென்று விளையாடிய ஆஸ்திரேலிய அணி எப்படி இருந்ததோ அதே போன்று தான் தற்போதைய அணியும் உள்ளது. அந்த சமயத்தில் ஆஸ்திரேலிய அணியில் ஆலன் பார்டர், பாப் சிம்சன் ஆகிய இரு ஜாம்பவான்களை தவிர்த்து, மற்ற வீரர்களுக்கு அனுபவம் கிடையாது. வீரர்கள் எதிரணியை பற்றி அதிகமாக கவலைப்படவில்லை. ஆனால் தங்களுக்குள் கவலையை பகிர்ந்து கொண்டனர்.

அப்போது ஒவ்வொரு வீரர்களிடமும் இரு ஜாம்பவான்களும் தனித்தனியாக பேசி ஊக்கப்படுத்தினர். ஓரிரு வாரத்திற்குள் சரியான வியூகங்களுடன் ஆஸ்திரேலியா முழு உத்வேகத்துடன் செயல்பட்டது. வீரர்களுக்கு பயிற்சியாளர் மற்றும் கேப்டன் ஆதரவு அளித்தனர். 3 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடர் சமனில் (0-0) முடிந்தது. இவ்வாறு டீன் ஜோன்ஸ் கூறியுள்ளார்.

இந்தியா- ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு மற்றொரு ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் சேப்பல் பதில் அளித்து கூறுகையில் ‘என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணிக்கு தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக சொல்வேன். இப்படி சொல்வதற்கு ஒரே ஒரு காரணத்தை சொல்ல முடியும். இங்கிலாந்து மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வி அடைந்தது ஏமாற்றம் அளித்தது. அந்த தொடரில் இந்திய அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். திறமை அடிப்படையில் பார்த்தால், இந்த ஆஸ்திரேலிய அணியை இந்தியா வீழ்த்த வேண்டும். ஆனால் இந்திய அணியில் ஏதோ ஒன்று இல்லாதது போல் தெரிகிறது.

மற்றொரு விஷயம் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சு பிரமாதமாக உள்ளது. உள்ளூரில் ஆஸ்திரேலியாவின் மிரட்டலான பந்து வீச்சு நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆனால் ஆஸ்திரேலியாவில் இந்திய பந்து வீச்சு இதுவரை பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியதில்லை. அதனால் தான் இந்த தொடரை ஆஸ்திரேலியா வெல்லும் என்று கூறுகிறேன்.

இந்த தொடர், ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சு தாக்குதலுக்கும், விராட் கோலியின் பேட்டிங்குக்கும் இடையிலான மோதலாக இருக்கும் என்பது சுவாரஸ்யமான அம்சமாகும். அதை ஆவலுடன் எதிர்நோக்குகிறேன்’ என்றார்.

‘ஆஸ்திரேலிய அணி டெஸ்ட் தொடர்களில் ஒரு இன்னிங்சில் 350 முதல் 400 ரன்களை சீராக எடுத்து வருகிறது. ஆனால் இந்த தொடரில் ஓரிரு முறை மட்டுமே இவ்வாறு எடுக்க முடிந்தால், ஆச்சரியப்படும் நிறைய பேரில் நானும் ஒருவனாக இருப்பேன்’ என்றும் இயான் சேப்பல் குறிப்பிட்டார்.


Next Story