விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்


விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் - டிராவிஸ் ஹெட்
x
தினத்தந்தி 2 Dec 2018 11:15 PM GMT (Updated: 2 Dec 2018 9:43 PM GMT)

விராட் கோலியை எங்களது பவுலர்கள் கட்டுப்படுத்துவார்கள் என டிராவிஸ் ஹெட் கூறினார்.

அடிலெய்டு,

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 6-ந்தேதி தொடங்க உள்ள நிலையில் ஆஸ்திரேலிய இடக்கை ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய கேப்டன் விராட் கோலி மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்பதில் சந்தேகமில்லை. அவரை எங்களது பந்து வீச்சாளர்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். அவர், மூன்று அதிவேக பந்து வீச்சாளர்களை (ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ்) சந்திக்க வேண்டியது இருக்கும். போதுமான நெருக்கடி கொடுத்தால் நிச்சயம் தவறிழைத்து ஆட்டம் இழந்து விடுவார். இதை செய்வதற்குரிய பவுலர்கள் எங்களிடம் இருக்கிறார்கள்.

‘இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இடக்கை ஆட்டக்காரர்களுக்கு எதிராக நன்றாக பந்து வீசக்கூடியவர், அதை எப்படி சமாளிக்கப்போகிறீர்கள்’ என்று கேட்கிறீர்கள். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவரது பந்து வீச்சை சந்தித்து இருக்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது பவுலிங்கை அதிகமாக சந்தித்த அனுபவம் கிடையாது. அதே சமயம் சுழற்பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளக்கூடிய பேட்ஸ்மேன்கள் எங்களது அணியில் உள்ளனர். பயிற்சி ஆட்டத்தின் போது அஸ்வினின் பந்து வீச்சை நீல்சன் (சதம் அடித்தவர்) சிறப்பாக எதிர்கொண்டு ரன்கள் குவித்தார். அதனால் அஸ்வினை சமாளிப்பது குறித்து நீல்சனிடம் பேசி அறிந்து கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story