ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு -சச்சின் தெண்டுல்கர்


ஆஸ்திரேலிய தொடரை வெல்ல இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு -சச்சின் தெண்டுல்கர்
x
தினத்தந்தி 3 Dec 2018 6:50 AM GMT (Updated: 3 Dec 2018 11:07 PM GMT)

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரைக் கைப்பற்ற இந்தியாவுக்கு பொன்னான வாய்ப்பு இருப்பதாக சச்சின் தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது என்று தெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் (20 டெஸ்டில் 1,809 ரன்கள்) குவித்த வெளிநாட்டு வீரர் என்ற பெருமைக்குரிய சச்சின் தெண்டுல்கர் அளித்த ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது:-

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் தற்போது ஆஸ்திரேலிய ஆடுகளங்களின் தன்மை வெகுவாக மாறி இருக்கிறது. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தொடக்க ஆட்டக்காரர்கள் நிலைத்து நின்று ஆடுவது என்பது கடினமாக காரியமாகும். சில சமயங்களில் முதல் 4 விக்கெட்டுகள் கூட வேகமாக சரிந்து விடும். தொடக்க ஆட்டக்காரர்கள் முதல் 30 முதல் 35 ஓவர்கள் தாக்குப்பிடித்து நிற்க முயற்சிக்க வேண்டும். அதன் பிறகு ஆடுகளம் மற்றும் பந்து கடின தன்மையை இழந்து விடும். பேட்ஸ்மேன் விளையாட அனுகூலமாக மாறிவிடும்.

தற்போதைய ஆஸ்திரேலிய அணியை பார்க்கையில் வலுவானதாக தெரியவில்லை. அந்த அணி பேட்டிங்கில் ஸ்டீவன் சுமித், டேவிட் வார்னர் ஆகியோரையே அதிகம் நம்பி இருந்தது. அவர்கள் இருவரும் இல்லாததால் அந்த அணி வலுவிழந்து இருக்கிறது. அந்த அணியின் பந்து வீச்சு சுமாராக இருந்தாலும், வலுவான பேட்டிங் வரிசையை கொண்ட இந்திய அணியின் விக்கெட்டை வீழ்த்த எந்த அளவுக்கு திறமை இருக்கிறது என்பது தெரியவில்லை. ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணிக்கு பொன்னான வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2-வது டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா நன்றாக விளையாடினார். கடைசி நாளில் உணவு இடைவேளை வரை நிலைத்து நின்ற அவர் அதன் பிறகு ஆட்டம் இழந்தார். அவர் ஆட்டம் இழக்காமல் இருந்து இருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறி இருக்கும். அவர் நிலைத்து நின்று ஆடுவது முக்கியமானதாகும். ஆனால் ஆடும் லெவன் அணியில் யார் இருக்க வேண்டும் என்று நான் கருத்து கூறுவது சரியாக இருக்காது. வீரர்கள் ஓய்வறையில் நிறைய விஷயங்கள் நடக்கும். அதனை அணி நிர்வாகத்திடமே விட்டு விடுகிறேன் என்று அவர் கூறியுள்ளார்.



Next Story