நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் 348 ரன்னில் ஆல்–அவுட் அசார் அலி, ஆசாத் ‌ஷபிக் சதம்


நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் 348 ரன்னில் ஆல்–அவுட் அசார் அலி, ஆசாத் ‌ஷபிக் சதம்
x
தினத்தந்தி 5 Dec 2018 9:45 PM GMT (Updated: 5 Dec 2018 8:57 PM GMT)

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது.

அபுதாபி,

பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 274 ரன்களில் ஆட்டம் இழந்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய பாகிஸ்தான் அணி 2–வது நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்திருந்தது. அசார் அலி (62 ரன்), ஆசாத் ‌ஷபிக் (26 ரன்) களத்தில் இருந்தனர். இந்த நிலையில் 3–வது நாளான நேற்று அபாரமாக ஆடிய அசார் அலி தனது 15–வது சதத்தையும், ஆசாத் ‌ஷபிக் 12–வது சதத்தையும் பூர்த்தி செய்தனர். இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அந்த அணி 400 ரன்களை தாண்டும் என்றே தோன்றியது.

ஆனால் இந்த ஜோடி பிரிந்ததும் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. அசார் அலி 134 ரன்களிலும் (297 பந்து, 12 பவுண்டரி), ஆசாத் ‌ஷபிக் 104 ரன்களிலும் (259 பந்து, 14 பவுண்டரி) ஆட்டம் இழந்தனர். முடிவில் பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 348 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது. அந்த அணி கடைசி 62 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து புதுமுக சுழற்பந்து வீச்சாளர் வில்லியம் சோமர்வில்லே 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அடுத்து 74 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யாசிர் ஷா ஒரு விக்கெட் எடுத்தார். இதுவரை 199 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ள யாசிர் ஷா (33 டெஸ்ட்) போட்டியின் 4–வது நாளான இன்று அதிவேகமாக 200 விக்கெட்டுகள் சாய்த்த வீரர் என்ற மைல்கல்லை எட்ட வாய்ப்புள்ளது.


Next Story