ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்: மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை
x
தினத்தந்தி 8 Dec 2018 10:31 AM GMT (Updated: 8 Dec 2018 10:31 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட்டின் மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 166 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

அடிலெய்டு,

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டு நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட் செய்த இந்திய அணி புஜாராவின் சதத்தால் (123 ரன்) சரிவில் இருந்து தப்பித்ததுடன், முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்திருந்தது.

இதையடுத்து,  தனது முதல் இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி , இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. குறிப்பாக அஷ்வின் சுழலில் ஆஸ்திரேலிய வீரர்கள் தடுமாறினர். இதனால், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை தாரைவார்த்த ஆஸ்திரேலிய அணி, 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில்  88 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து இருந்தது.

இந்த நிலையில், இன்று 3-வது நாள் ஆட்டம் மழை காரணமாக ஏறக்குறைய அரைமணி நேரம் வரை பாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஆட்டம்  நடைபெற்றது.  மிட்செல் ஸ்டார்க் 15 ரன்கள் எடுத்து இருந்த நிலையில், பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். 91.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி 204 ரன்கள் எடுத்து இருந்த போது மீண்டும் மழை குறுக்கிட்டது.  இதனால்  ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது. 

இதைத் தொடர்ந்து மழை விட்டதும் மீண்டும் போட்டி துவங்கியது.  ஆஸ்திரேலிய அணிக்கு நம்பிக்கை அளித்து வந்த டிராவிஸ் ஹெட் 72 ரன்களில்  சமி பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹேசல்வுட், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இதன் முலம் ஆஸ்திரேலிய அணி 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் இந்திய அணியை விட  ஆஸ்திரேலிய அணி 15 ரன்கள் பின் தங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் , இஷாந்த் சர்மா,  சமி தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். 15 ரன்கள் முன்னிலையுடன் இந்திய அணி தனது 2-வது இன்னிங்சில் பேட் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய லோகேஷ் ராகுலும், முரளி விஜய்யும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். முரளி விஜய் 18 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ராகுலும் அவுட்டாகி வெளியேறினார்.

பின்னர் சட்டீஸ்வர் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். 34 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி அவுட்டாகவே சிறிது நேரத்தில் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

புஜாராவும், ரகானேவும் களத்தில் உள்ளனர். 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்தியா 151 ரன்கள் சேர்த்துள்ளது. முதல் இன்னிங்சில் 15 ரன்கள் முன்னிலையை சேர்த்து தற்போது இந்தியா 166 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

Next Story