ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்


ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் கம்பீர் சதம் அடித்தார்
x
தினத்தந்தி 8 Dec 2018 9:30 PM GMT (Updated: 8 Dec 2018 8:16 PM GMT)

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.

சென்னை,

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணி வீரர் கம்பீர் சதம் அடித்தார்.

கம்பீர் சதம்

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இதில் டெல்லியில் நடந்து வரும் ஆந்திரா–டெல்லி (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டத்தில் முதலில் ஆடிய ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 390 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய டெல்லி அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 190 ரன்கள் எடுத்து இருந்தது. கவுதம் கம்பீர் 92 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய கம்பீர் 185 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெறும் கம்பீர் முதல் தர போட்டியில் அடித்த 43–வது சதம் இதுவாகும். ஆட்ட நேரம் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்தது. இன்று 4–வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

மத்தியபிரதேச வீரர் சாதனை

இந்தூரில் நடைபெறும் ஐதராபாத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மத்தியபிரதேச அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 562 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் அஜய் ரோஹேரா 267 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் முதல் தர கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்தில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற உலக சாதனையை 21 வயதான அஜய் ரோஹேரா படைத்தார். இதற்கு முன்பு 1994–ம் ஆண்டில் மும்பை வீரர் அமோல் முஜூம்தார் 260 ரன்கள் எடுத்ததே முதல் தர போட்டியில் அறிமுக வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்னாக இருந்தது.

தமிழ்நாடு–கேரளா (பி பிரிவு) அணிகள் இடையிலான லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 268 ரன்கள் எடுத்தது. அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய கேரளா அணி 2–வது நாள் ஆட்டம் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய கேரளா அணி முதல் இன்னிங்சில் 152 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. இதனை அடுத்து 116 ரன்கள் முன்னிலையுடன் 2–வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 70.5 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா இந்திரஜித் 92 ரன்கள் எடுத்தார். பின்னர் 369 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2–வது இன்னிங்சை தொடங்கிய கேரளா அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 11 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் எடுத்துள்ளது.


Next Story