‘கடைசி நாளில் நாங்கள் ஹீரோவாக ஜொலிப்போம்’- லயன்


‘கடைசி நாளில் நாங்கள் ஹீரோவாக ஜொலிப்போம்’- லயன்
x
தினத்தந்தி 9 Dec 2018 9:15 PM GMT (Updated: 9 Dec 2018 7:07 PM GMT)

4 -வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சமீபத்தில் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கடைசி நாளில் எப்படி போராடி மீண்டோம் என்பது குறித்து விவாதித்தோம்.

4 -வது நாள் ஆட்டம் முடிந்த பிறகு ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் நிருபர்களிடம் கூறுகையில், ‘சமீபத்தில் துபாயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டில் கடைசி நாளில் எப்படி போராடி மீண்டோம் என்பது குறித்து விவாதித்தோம். இந்த டெஸ்டில் எங்களால் வெற்றி பெற முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். அந்த மாதிரி நினைப்பது தான் நல்லது. நாளைய (இன்று) நாளில் முதல் பந்து, முதல் ஓவர், முதல் மணி நேரம் எல்லாவற்றையும் வெற்றிகரமாக மாற்ற வேண்டியது முக்கியம். எங்களது வீரர்கள் நெருக்கடியை பற்றி நினைக்காமல் உற்சாகமாக, நம்பிக்கையுடன் போராட வேண்டும். ஷான் மார்ஷ், ஒரு சூப்பர் ஸ்டார். முதல்தர கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக நிறைய பந்து வீசியிருக்கிறேன். எனது பந்து வீச்சை மைதானத்தின் நாலாபுறமும் விரட்டியிருக்கிறார். ஆஸ்திரேலியாவில் விளையாடுவதில் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அவர் திகழ்கிறார். அவரும், டிராவிஸ் ஹெட்டும் கடைசி நாளில் ஹீரோவாக உருவெடுப்பார்கள் என்று நம்புகிறேன்.’ என்றார். கடந்த மாதம் இதே மைதானத்தில் நடந்த முதல்தர கிரிக்கெட்டில் மேற்கு ஆஸ்திரேலிய அணிக்காக இறங்கிய ஷான் மார்ஷ் 163 ரன்கள் விளாசி, 313 ரன்கள் இலக்கை எட்ட வைத்தது நினைவு கூரத்தக்கது.

இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறுகையில், ‘பின்வரிசை பேட்ஸ்மேன்களிடம் இருந்து குறைந்தது 25 ரன்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்தோம். இந்த பகுதியில் நாங்கள் தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. 9, 10, 11-வது வரிசை ஆட்டக்காரர்கள் கொஞ்சமாவது சிறப்பாக ஆட வேண்டும். புஜாராவும், ரஹானேவும் தரமான டெஸ்ட் கிரிக்கெட் வீரர்கள். எப்போதெல்லாம் அவர்கள் நன்றாக ஆடுகிறார்களோ, அப்போது அணியும் வலுவான நிலைக்கு சென்று விடும்.

கேப்டவுன் (தென்ஆப்பிரிக்கா), லண்டன் ஓவல் (இங்கிலாந்து) ஆகிய இடங்களில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ஒரு கட்டத்தில் நல்ல நிலைமையில் இருந்து தோல்வியை தழுவினோம். ஒரு அணியாக நாங்கள் எப்போதும் சவால் மிக்க அணியாக உணருகிறோம். இப்போது தேவை, முன்பு போல் அல்லாமல் தடையை வெற்றிகரமாக கடக்க வேண்டும்’ என்றார்.

Next Story